'டிரைவர் ஜமுனா' என்ற தலைப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. திகிலும் அடிதடியும் நிறைந்த படமாக உருவாகி உள்ளது என்கிறார் இயக்குநர் கின்ஸ்லின்.
இவர் இயக்கிய முதல் படம் 'வத்திக்குச்சி' வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டாவது படத்துக்கான கதையை தயார் செய்யும்போதே ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகி என மனதளவில் தீர்மானித்துவிட்டாராம்.
"அவர் மறுத்துவிட்டாலோ, கால்ஷீட் தர முடியாத சூழல் என்றாலோ ஒன்றும் செய்ய இயலாது என்பதால் வேறு சில நடிகைகளின் பெயர்களையும் மனதில் வைத்திருந்தேன். ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து கதை சொன்னேன். முழுமையாக விவரித்து முடித்ததும் முதல் சந்திப்பிலேயே நடிக்கச் சம்மதம் என்று சொல்லிவிட்டார்.
"ஐஸ்வர்யா அதிக கவனத்தோடு கதை கேட்பார். கதை சொல்ல ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் அதை கேட்பவருக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை அவர்களுடைய முகபாவத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
"ஐஸ்வர்யாவிடம் கதையைச் சொல்லி முடித்ததும் உற்சாகமாகிவிட்டார். அவர் முழுமையான நடிகை. எத்தகைய சோதனை முயற்சிகளுக்கும் தயாராக இருப்பார். நன்றாக ஒத்துழைப்பார். கடும் உழைப்பாளி.
"இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பரபரப்பான சாலைகளில் எடுக்கப்பட்டுள்ளன. காரணம் கதையின் அமைப்பு அப்படிப்பட்டது. சாலையை நன்கு கவனித்து பாதுகாப்பாக காரோட்ட வேண்டும். வாடகைக் கார் ஓட்டுநருக்குரிய லாவகம் முக்கியம். அந்த வகையில் ஐஸ்வர்யா திறமையாகவும் பாதுகாப்புடனும் காரோட்டினார். அது மட்டுமல்ல, அடுத்த காட்சியை எடுக்க வேண்டிய இடம் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தால் அவரே காரோட்டி வந்துவிடுவார். அவருடன் பணியாற்றுவது இயக்குநர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்," என்கிறார் இயக்குநர் கின்ஸ்லின்.
தமக்கான கதாபாத்திரத்தை மெருகேற்றுவதில் ஐஸ்வர்யா கெட்டிக்காரர் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு வசனத்தையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு, காட்சியின் தன்மையை விரைவாகப் புரிந்துகொண்டு நடிப்பதாகப் பாராட்டுகிறார்.
பிரம்மாண்டப் படம் என்பது அதற்கு ஆகக்கூடிய செலவை வைத்து கணக்கிடக்கூடாது என்றும் படத்தில் நடிக்கும் கலைஞர்களின் திறமையும் உழைப்பும் எந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது என்பதை வைத்து கணக்கிட வேண்டும் என்றும் சொல்கிறார் கின்ஸ்லின்.
"ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் வேறு ஒரு ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு ஈடுபாடு காட்டியுள்ளார்.
"இது குற்றச் சம்பவங்களும் திகிலும் நிறைந்த படம். முழுக் கதையும் காரில் நடக்கும். ஒரே நாளில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடம் சேரும்வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் கதை. பெண் ஓட்டுநர் காரில் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு செல்கிறார். அந்தப் பயண நேரத்தில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, எப்படிப் போராடி வெல்கிறார் என்பதுதான் கதை.
"இதுபோன்ற படம் தமிழ்ச் சினிமாவுக்குப் புதியது. எதிர்மறை நகைச்சுவை, முழுநீள வித்தியாசமான திகில் படம் ஆகியவை எல்லாம் அண்மையில்தான் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளன.
"டிரைவர் ஜமுனா' படத்துக்கான திரைக்கதையை அமைப்பது மிக சவாலான அனுபவம். பொதுவாக ஒரு காட்சியை நான்கைந்து இடங்களில் எடுப்பார்கள். ஆனால் மொத்தப் படமும் காரில்தான் நடக்கும் என்று சொல்லும்போது எல்லாமே சவாலாக மாறிவிடுகிறது ," என்கிறார் கின்ஸ்லின்.
இந்தப் படத்தில் 'ஆடுகளம்' நரேன், கவிதா பாரதி, ரஞ்சனி, அபிஷேக், மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சில புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.
"வத்திக்குச்சி' படத்துக்குப் பிறகு உடனே படைப்பைத் தர முடியவில்லை என்றாலும் திரைத்துறையில்தான் இருந்தேன். இத்துறையில் இடைவெளி ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாது. ஆனாலும் மகிழ்ச்சியாகவே இருந்தேன். இப்போது இரண்டாவது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற திறமைசாலிகளுடன் இணைந்து பணியாற்றும்போது வெற்றி என் கண்களுக்குத் தெரிகிறது," என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் கின்ஸ்லின்.
, :