தமிழ் சினிமாவின் டான்கள் என்றால் அது சிவகார்த்திகேயனும் அனிருத்தும்தான் என்று அண்மையில் உதயநிதி பேசியது கோடம்பாக்கத்தினரால் உற்றுக்கவனிக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அடுத்து ரஜினி படத்தில் நடிக்க உள்ளார், இயக்குநர் சங்கருடன் பணியாற்றப்போகிறார் என்று சிவாவைப் பற்றி நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் அவர் வழக்கம்போல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
"உதயநிதி சார் பெருந்தன்மையானவர். சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசியதாகவே கருதுகிறேன். 'டான்' என்று சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகன் கிடையாது. நல்ல நடிகர் என்று பெயர் வாங்கினால் அதுவே போதும். அதை நோக்கித்தான் எனது ஓட்டம் இருக்கிறது.
"டான்' படத்தைப் பொறுத்தவரையில் பள்ளி, கல்லூரி மாணவனாக நடிக்க அதிகம் மெனக்கெடவில்லை. உணவுக்கட்டுப்பாடு என்பதை எல்லாம் யோசிக்கவே இல்லை. பிரியாணி, ஐஸ்கிரீம் இரண்டையும் நிறுத்திவிட்டாலே என் உடல்வாகு கச்சிதமாகிவிடும்.
"இப்படியெல்லாம் சிரமப்பட்டு நடிக்க வேண்டுமா என இயக்குநர் சிபியிடமே கேட்டேன். ஆனாலும் உண்மையான மாணவர்கள் மத்தியில் உட்கார்ந்து, அவர்களுடன் பேசி நடிக்கும்போது எந்தக் குறையும் தெரியவில்லை. அதை நினைக்கும்போது மனநிறைவாக உள்ளது," என்கிறார் சிவா.
கதைகளை கவனமாக தேர்வு செய்தாலும் ஒரு படத்தின் வெற்றி ரசிகர்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்று குறிப்பிடுபவர், மக்களின் ரசனை மாறவில்லை என்றாலும் ஒரு படத்தை அணுகும் விதமும் பார்வையும் மாறியுள்ளது என்கிறார்.
"கைபேசி, ஓடிடி எனப் படங்களைப் பார்க்கும் வசதிகள் அதிகரித்துள்ளன. இதற்கு இடையில் நாம் நடிக்கும் படங்களும் ஓடவேண்டும் என்றால் கதைகளைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் வேண்டும்.
"ஒரு படத்தின் வெற்றிக்கு கதை, கதாபாத்திரங்கள் எனப் பல அம்சங்கள் கச்சிதமாக அமைய வேண்டும். இவை எல்லாம் இயக்குநரின் பொறுப்பு. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என்பதை இயக்குநர்தான் தீர்மானிக்க வேண்டும்.
"கல்லூரி டான் கதாபாத்திரத்தில் நடித்தாகிவிட்டது. அடுத்து ரவுடிக்கும்பல் தலைவனாக நடிப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். முன்பே குறிப்பிட்டதுபோல் அந்தக் கதாபாத்திரம் எனக்குப் பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் நம்பினால், நடிக்க நான் தயார்," என்று சொல்லும் சிவகார்த்திகேயன், ரஜினியுடன் தாம் நடிப்பதாக வெளியான தகவலை மறுக்கிறார். அது தொடர்பாக இதுவரை யாருமே தம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்கிறார்.
ஒரு பொழுதுபோக்கு கலைஞராகத்தான் திரையுலகில் தாம் அறிமுகமானதாகக் குறிப்பிடுபவர், அத்தகைய படைப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்போவதாகச் சொல்கிறார். அதேசமயம் 'வேலைக்காரன்', 'ஹீரோ', 'கனா' போன்ற படங்களிலும் நடித்து மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்ல விரும்பு கிறாராம்.
"100 கோடி ரூபாய் வசூல் ஆட்டத்தில் நானும் சேர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த வெற்றியை என் தலையில் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை. "நூறு கோடி ரூபாய் வசூலுக்காக படம் எடுக்கிறோம் என்று அறிவித்துவிட்டு படம் எடுக்க முடியாது. அது மக்கள் தீர்மானிக்கும் விஷயம்.
"மக்களுக்குப் பிடித்தால்தான் அது 100 கோடி ரூபாய் படம்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். அது பெரிய விஷயமல்ல. கல்லூரி நாள்களில் யுவன் சங்கர் ராஜா, நா. முத்துக்குமார் கூட்டணியில் உருவான பாடல்கள்தான் என்னுடைய அத்தனை உணர்வுகளுக்கும் வடிகாலாக அமைந்தன. நா.முத்துக்குமாரை நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். எந்தப் பாடலாக இருந்தாலும் 15 நிமிடங்களில் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை நான் ஆழமாக ரசித்திருக்கிறேன்.
"அவர் மரணத்துக்குப் பின் அஞ்சலி செலுத்த சென்றபோது என் கண்ணில்பட்டது ஒன்றுதான். அவருடைய குழந்தை அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தது. "அது என்னை வெகுவாகப் பாதித்தது. நான் எழுதும் பாடல்களுக்குக் கிடைக்கும் தொகையை அந்தக் குடும்பத்துக்கு அளிக்கிறேன்," என்கிறார் சிவகார்த்திகேயன்.
, :