நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தாம் நடித்துள்ள படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் கமல்ஹாசன்.
இதற்காக பார்வையாளர்களுக்குத் தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய சினிமாவை வடக்கு, தெற்கு என்று பிரித்துப் பேசுவது பற்றி கேட்கின்றனர். என்னை எப்போதும் ஓர் இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் என்னால் வசதியாக இருக்க முடியும். இதுதான் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அழகு.
"வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் திறமைகளை அறிவேன். அவற்றைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் திரைப்படங்களை உலகளவில் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.
"இவ்விஷயத்தில் நாம் பெரும் தாமதத்தை ஏற்படுத்திவிட்டோம். இனியும் அது நீடிக்கக்கூடாது. இந்தியத் திரையுலகை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதை திரையுலகினர் பார்த்துக்கொள்வார்கள். அரசு இதில் தலையிட வேண்டாம்," என்றார் கமல்ஹாசன். இவர் நடித்த 'விக்ரம்' படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.