இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு இதயத்திற்குச் செல்லக் கூடிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவரது உடல்நிலை மெல்லத் தேறி வருகிறது என்றபோதிலும் மிக விரைவில் இவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக இவரின் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ராஜேந்தரை உடன் இருந்து கவனித்துக்கொள்ள அவருடைய மகன் சிம்புவும் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்ப தாகக் கூறப்படும் நிலை யில் இருவரும் பல கோவில்களுக்குச் சென்று வருகின்றனர். அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலுக்கும் சென்றனர். நேற்று முன்தினம் நயன்தாரா அங்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். திருமணத்துக்கு முன்பு குலதெய்வ கோவிலுக்குச் செல்வது வழக்கம். எனவே இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பது உறுதி என சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனக ராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. இத்தகவலை லோகேஷ் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ். இந்நிலையில், அண்மையில் அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் விஜய்.