இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் தயாராகும் படங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சிவகார்த்திகேயன் இவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்றும் கூறுகிறார்.
"நானும் அவரும் ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தால் இதுபோன்ற வதந்தி ஓரளவு எடுபட்டிருக்கும். ஆனால், இருவரும் மூன்று படங்களில் நடித்திருக்கிறோம். இருவருக்கும் வயதாகிவிடவில்லை. நிறைய கால அவகாசம் உள்ளது. நல்ல கதையும் சூழ்நிலையும் அமையும்போது இருவரும் மீண்டும் இணைந்து நடிப்போம்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
மணிரத்னம், சங்கர், ராஜமௌலி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக குறிப்பிடுபவர், விஜய், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் ஜோடி சேரவும் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
தமிழை விட்டுவிட்டு தெலுங்குப் படங்களுக்கு தாம் முன்னுரிமை தருவதாக கூறப்படுவதையும் கீர்த்தி தரப்பு திட்டவட்டமாக மறுக்கிறது.
"தமிழில் 'அண்ணாத்த', 'சாணி காயிதம்' ஆகியவற்றுக்குப் பிறகு 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறேன். இதற்கிடையே, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த தெலுங்குப் படம் வெளியாகி உள்ளது.
"மேலும் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறேன். எனவே, தமிழ், தெலுங்கு எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. நல்ல வாய்ப்புகள் அமைந்தால், அவற்றில் நடிக்க கால அவகாசம் இருந்தால் நிச்சயமாக அவற்றை ஏற்பேன்," என்கிறார் கீர்த்தி.
திடீர் திடீரென உடல் எடையைக் குறைப்பது ஏன் என்று சிலர் கேட்கிறார்களாம். கதையும் கதாபாத்திரமும்தான் ஒரு படத்துக்கான தனது தோற்றத்தைத் தீர்மானிக்கும் என்கிறார்.
"மகாநதி' படத்துக்குப் பிறகு ஏழு மாதங்கள் வீட்டில் இருந்தபோது உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என இருந்தேன். அதன் பிறகு எடையைக் குறைத்தேன்.
"எனது நடிப்பில் வெளியான படங்களைப் பார்த்தாலே, எதற்காக உடல் இளைத்தேன், ஏன் உடல் எடையை அதிகரித்தேன் என்பதெல்லாம் தன்னால் புரியும். தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது.
"தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில மொழிகளில் நடித்திருக்கிறேன். இன்னும் நிறைய மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்படி பல மொழிகளில் நடித்தாலே 'பான் இந்தியா' எனப்படும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற பிரம்மாண்டப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தன்னால் அமையும் என நம்புகிறேன்," என்று சொல்லும் கீர்த்திக்கு, விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிடிக்குமாம்.
சேதுபதி சவாலான கதாபாத்திரங்களில்கூட அசத்தலாக நடிப்பதாகவும் அவரது நடிப்புப்பாணி வித்தியாசமாக உள்ளது என்றும் சொல்கிறார்.
"விஜய் சேதுபதி முழுப் படத்தையும் தன் தோளில் சுமக்கும் திறமையைக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து நடிப்பது நிச்சயம் சவாலான அனுபவமாக இருக்கும். அதேபோல் ஜெயம் ரவி, கார்த்தியின் நடிப்பும் பிடிக்கும்.
"அண்மையில் 'சாணிக் காயிதம்' படத்தில் நடித்தபோது, செல்வராகவனின் நடிப்பைக் கண்டு மிரண்டு போனேன். ஒருமுறை தனுஷை சந்தித்தபோது அவரிடம் இதுகுறித்து கூறினேன். அவரோ, 'நானும்கூட அண்ணனிடம் இருந்துதான் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் கச்சிதமாக நடித்துக்காட்டுவார்' என்றார்.
"அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, என் சம்பளம் குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சம்பளம்தான் வாங்குகிறேன். சில சமயங்களில் நல்ல கதையைத் தயாரிக்கும் சிறிய நிறுவனங்களுக்காக சம்பளத்தை சற்று குறைத்துக்கொள்வதும் உண்டு.
"'சாணிக் காயிதம்' போன்ற படங்களில் தொடர்ந்து நடிப்பேன். அதேசமயம், வணிகப்படங்களிலும் நல்ல பாத்திரங்கள் அமைந்தால் ஏற்றுக்கொள்வேன்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
, :

