ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள 'வீட்ல விசேஷம்' முழுநீள குடும்பப்படமாக உருவாகி உள்ளது. சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக்யராஜ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 'வீட்ல விசேஷம்'. அதன் தலைப்பை மட்டும் பாக்யராஜிடம் கேட்டுப் பெற்றனராம்.
"படத்தின் தலைப்பை வைத்தே இது குடும்பப்படம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற கதையை தமிழிலும் படமாக்கினால் நன்றாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் கருதினார். இந்த வாய்ப்பு என்னைத் தேடிவந்தபோது பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். இந்திப் பதிப்பில் சில மாற்றங்களைச் செய்து, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு உருவாக்கி உள்ளோம்," என்கிறார் ஆர்ஜே பாலாஜி.
இவரது 'மூக்குத்தி அம்மன்' படத்தில் இடம்பெற்ற குடும்பக்காட்சிகள் சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர். அதனால் அதேபோன்ற காட்சிகளை புதுப்படத்திலும் வைத்துள்ளாராம்.
"நம் எல்லோருக்குமே துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம் என்று எல்லாம் இருக்கும். அவை எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அத்தனைக்கும் நடுவில் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறது அல்லவா, அதுதான் என் ஆச்சரியம்.
"அப்படிப்பட்ட ஆச்சரியங்களையும் நம்பிக்கைகளையும் தருகிற படங்களை உருவாக்கவேண்டும் என்று எனக்கு ஆசை. ஒரு நகைச்சுவை நடிகராக இருந்துகொண்டு நம் மனதுக்கு ஒப்பாத சில விஷயங்களைக்கூட செய்ய வேண்டியிருக்கும். அப்படி இல்லாமல் எனக்குப் பிடித்த கருத்துகளைச் சொல்ல காத்திருந்தேன். அப்போதுதான் இந்தப் புதுப்பட வாய்ப்பு தேடி வந்தது," என்கிறார் பாலாஜி.
ஐம்பது வயதுப் பெண்மணி மீண்டும் தாய்மை அடைகிறார். எதிர்பாராத அந்தச் சூழலை அவரது குடும்பத்தில் மகன், பாட்டி உள்ளிட்ட பலர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் 'வீட்ல விசேஷம்' படத்தின் கதை.
உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு குறைவில்லாத படமாம். அதற்காக சமுதாயத்துக்குத் தேவையான கருத்து என்றெல்லாம் எதையும் திணிக்கவில்லை என்கிறார்.
"தினந்தோறும் நூற்றுக்கணக்கான அறிவுரைகளைக் கேட்டு வருகிறோம். இதற்கும்மேல் திரைப்படங்களிலும் அறிவுரை சொன்னால் ரசிகர்களால் தாங்க முடியுமா என்று தெரியவில்லை.
"இந்தப் படம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். முழுப்படத்தையும் பார்த்த சத்யராஜ் சார், 'என்னோட சிறந்த பத்துப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்போதுதான் திரையுலகில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது' என்றார்.
"அவரைப் போன்ற பெரிய கலைஞரிடம் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஊர்வசி அம்மாவுக்கு ஒரு கதாபாத்திரம் அமைந்துவிட்டால் அதை வேறோர் உயரத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அனைவருக்குமே தெரியும். இந்தப் படத்தில் அவரது மகனாக நடிக்கிறேன். எனக்கு இணையாக அபர்ணா நடிக்கிறார். என்னோடு சேர்ந்து இந்தப் படத்தை சரவணனும் இயக்குகிறார். எங்கள் கூட்டணி மூன்று படங்களாகத் தொடர்கிறது," என்கிறார் பாலாஜி.
சமூக ஊடகங்களில் இப்போது எந்த கருத்தையும் முன்வைக்க முடியவில்லை என்பவர், எதைச் சொன்னாலும் அதை எதிர்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் கிளம்பி வருவதாகச் சொல்கிறார்.
"இரண்டும் இரண்டும் நான்கு என்று எழுதினால்கூட அதில் தவறு இருப்பதாகக் கூறிக்கொண்டு 15 பேராவது களத்தில் குதிக்கிறார்கள். என்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதான அக்கறை எனக்குக் கூடப்பிறந்தது.
"என் மனதிற்குப் பட்டதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. பல இடங்களில் என்னைச் சந்திப்பவர்கள், 'சரியாகப் பேசினீர்கள்' என்று பாராட்டுகிறார்கள். பெரியவர்கள் கைகொடுத்து, முதுகில் தட்டிக்கொடுக்கிறார்கள்.
"எங்கள் பக்கத்து நியாயத்தைச் சொல்லிவிட்டீர்கள் என பெண்மணிகள் சொல்கிறார்கள். இப்படி நல்லபடி பேசுவது நிறைய பேருக்குப் போய்ச் சேர்வதால் அதை எப்போதும் செய்யப்போகிறேன்," என்கிறார் ஆர்ஜே பாலாஜி.