ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு சுமார் 775 கோடி ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது அவர் தனது கணவர், குழந்தைகளுடன் மும்பையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மதிப்பு மட்டுமே 112 கோடி ரூபாய் ஆகும். துபாய், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இவருக்குச் சொந்தமாக வீடு, கட்டடங்கள் உள்ளன. இப்போதும்கூட ஒரு படத்தில் நடிக்க பத்து கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு நாள் ஒன்றுக்கு ஐஸ்வர்யாவின் சம்பளம் ஐந்து கோடி ரூபாயாம்.
இந்த வகையில் ஆண்டுதோறும் நூறு கோடி சம்பாதிக்கும் ஐஸ்வர்யா ராயிடம், எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளது. அவருக்கு தற்போது 48 வயதாகிறது.
திருமணம் செய்து கொண்டால்தான் வாழ்க்கை முழுமையடையும் என்பதை தம்மால் ஏற்க இயலாது என்கிறார் நடிகை கியாரா அத்வானி.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது, ஒரு நடிகையாக நிறைய சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"ஒருசிலர் நன்கு சம்பாதித்து திருமணம் செய்துகொண்ட பிறகே வாழ்க்கையின் முழு பயனையும் பெற முடியும் எனக் கருதுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இப்போது நான் மகிழ்ச்சியாகத்தான் உள்ளேன்," என்றார் கியாரா அத்வானி. 'எம்எஸ் தோனி' உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரிந்த விஷயம். அந்தப் பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். பாடல் பதிவின்போது முதலில் சில வரிகள் பாடிய ஆண்ட்ரியாவுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். அதனால் பாட முடியாது என மறுத்துள்ளார். "இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் எனது நீண்ட கால நண்பர். அந்தப் பாடலை நான்தான் பாட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் பலமுறை கட்டாயப்படுத்தி அந்தப் பாடலைப் பாட வைத்தார்.
"அவர் ஊக்கமளித்திருக்காவிட்டால் அந்தப் பாடலைப் பாடியிருக்க மாட்டேன். எனவே, அந்தப் பாடல் வெற்றி பெற அவர்தான் முழுக் காரணம்," என்று அண்மைய பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு 'கேப்டன் மில்லர்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1930களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்து கதையை உருவாக்கி உள்ளனர். இந்திய அளவில் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் மிகப்பெரும் பொருள் செலவில் படத்தை உருவாக்க உள்ளதாகச் சொல்கிறார் அருண் மாதேஸ்வரன். படத்தில் அதிரடி, அடிதடியுடன் நகைச்சுவைக் காட்சிகளும் இருக்குமாம். முதல்முறையாக தனுஷுடன் இணைந்துள்ளார் பிரியங்கா.
அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தில் அரசியல் நையாண்டி காட்சிகளை இடம்பெற வைக்க இயக்குநர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அஜித்தோ, அரசியல் நெடி அறவே கூடாது எனக் கூறிவிட்டதாகத் தகவல்.