தன்னை தனி நாயகியாக ஒப்பந்தம் செய்து திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு நஷ்டம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தாம் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகச் சொல்கிறார் டாப்சி.
இந்தித் திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் இவர், சொந்தப் பட நிறுவனம் மூலம் சில திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார்.
"ஒரு தயாரிப்பாளருக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்படும் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். இத்தனை ஆண்டு கால அனுபவத்தை துணையாகக் கொண்டுதான் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் தயாரிப்புச்செலவைக் கட்டுப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும், நாயகி மட்டுமே இருந்தால் வசூல் அதிகரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அத்தகைய படங்களை முன்னணி நாயகன் அல்லது இயக்குநர் தயாரிப்பதாக அறிவிக்கின்றனர்.
"தனி நாயகி நடிக்கும் படங்களுக்கு இவ்வாறு நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதுதான் படத்தின் வெற்றிக்கு உதவும் என்ற நிலையை மாற்ற விரும்புகிறேன்," என்கிறார் டாப்சி.
தனது படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறுவது முக்கியம் என்று கூறுபவர், ஒவ்வோர் ஆண்டும் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. அவை தரமாகவும் வசூலில் சாதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்கிறார். தற்போது ஷாரூக் கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். சிறு வயது முதலே இவர் ஷாரூக்கின் தீவிர ரசிகையாம். அவருடன் இணைந்து நடிப்பது கனவுபோல் இருப்பதாகச் சொல்கிறார்.
"தனி நாயகியாக நடித்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. கடந்த 12 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். இது ஆணாதிக்கம் உள்ள துறை. தற்போது நான், ரகுல் பிரீத் சிங், பூஜா ஹெக்டே ஆகியோர் மொழிகளைக் கடந்து நடித்து வருகிறோம். நடிக்க வந்த புதிதில் மொழியால் ஏற்படக்கூடிய தடைகளைக் கடக்க சிரமப்பட்டேன்.
"தென்னிந்திய நடிகை என்று இந்தித் திரையுலகில் முத்திரை குத்தப்பட்டேன். எதன் அடிப்படையில் இப்படிச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ரசிகர்கள் மனதில் உள்ள அந்த எண்ணத்தை மாற்ற சிரமப்பட்டேன். ஸ்ரீதேவி போன்ற ஒன்றிரண்டு பேரை மட்டுமே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதாகச் சொல்லலாம். என்னையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள நான் ஒன்றும் ஸ்ரீதேவி அல்ல. இதை உணர்ந்ததால்தான் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடிகிறது," என்கிறார் டாப்சி.
டாப்சி
பன்னு
, :

