நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றி வந்த படம் கைவிடப்பட்டதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், அத்தகவல் உண்மையல்ல என்று தமது டுவிட்டர் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி உள்ளார் சூர்யா.
இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதுடன், இப்புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
'சூர்யா 41' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சூர்யாவின் '2டி' நிறுவனம் தயாரிக்கிறது.
அண்மையில், இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு சிறிய காட்சியைப் படமாக்கியபோது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்தக் காட்சிக்காக காலை முதல் மதியம் வரை கடும் வெயிலில் சூர்யா திரும்பத்திரும்ப நடித்ததாகவும் அப்போதும்கூட அந்தக்காட்சி படமாக்கப்பட்டது மனநிறைவு தரவில்லை என பாலா கூறியதாகவும் தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் இயக்குநர் உட்பட யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சூர்யா கிளம்பிச் சென்றுவிட்டதாகப் பேசப்பட்டது. இந்நிலையில், 'சூர்யா 41' படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பின்போது பாலாவும் அவரும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவுடன் சூர்யா.

