"ஒருவரைப் பார்த்ததும் நீங்க என்ன சாதி என்று கேட்கும் பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் இப்படித்தான்," என்று கோபத்தில் பொங்குகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவரைத் தெரியாதவர்களே இல்லை என்றாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் அசத்தியவர்.
இப்போது மீண்டும் ஒரு வெற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார். 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் இவரது வில்லத்தனம் பார்த்தவர்களை மிரள வைத்திருக்கிறது.
இந்நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தி சாதி, மதம் பார்த்து பழகக்கூடியவர் என்ற முணுமுணுப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்டால், தனக்கே உரிய இயல்புடன் மனிதர் பொரிந்து தள்ளுகிறார்.
"நான் யார் என்பது எனக்குத் தெரியும். சிறு வயது முதல் இப்போது வரை சாதி இல்லை என்று சொல்லி வளர்க்கப்பட்டுள்ளோம். எங்கள் வீட்டில் எப்போதுமே சமத்துவம் இருக்கும். வீட்டில் வேலை செய்பவர்களைக்கூட பெயர் சொல்லிக் கூப்பிடாமல் அண்ணா என்றுதான் அழைப்போம். வா, போ என்று குறிப்பிட அனுமதி இல்லை. குழந்தையாக இருந்தாலும் கூட மரியாதை தர வேண்டும்.
"நெருக்கமானவர்களிடம் உரிமையோடு ஒருமையில் பேசினாலும் அக்கா திட்டுவார். எனக்குத் தெரிந்து ரஜினி, கமல் சாரெல்லாம் கூட சாதாரண ஆள்களை வாங்க, போங்க என்றுதான் கூப்பிடுவார்கள்.
"அப்படி இருப்பது பெரிய விஷயம் என நினைக்கிறேன். எனக்கு ஒருவரிடம் சாதியை விசாரிக்கும் பழக்கம் எல்லாம் அறவே கிடையாது," என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

