சத்தமில்லாமல் 75 படங்களில் நடித்து முடித்துள்ளார் வித்யுலேகா. நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவருக்கு இப்போது தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லை.
ஆனால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தன்னை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்திருப்பதாகச் சொல்லி பூரித்துப்போகிறார் வித்யுலேகா.
"கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் என்னைப் பார்த்தவர்களுக்கு குண்டுப் பெண்ணாகத்தான் நினைவுக்கு வருவேன். இல்லையென்றாம் சந்தானம் கூட நடித்தவர், அந்தப் படத்தில் நடித்தவர் என்று குறிப்பிடுவார்கள். என்னை அடையாளம் கண்டு கொண்டாலும், என் பெயர்கூட பல ரசிகர்களுக்குத் தெரியாது.
"ஆனால் 'குக் வித் கோமாளி' என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி என்னைப் பிரபலமாக்கி உள்ளது. குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட என் பெயரைச் சொல்கிறார்கள். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். என் படங்களை வைத்து 'மீம்'கள் வெளியாகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது பூரித்துப்போகிறேன்.
"எல்லாரும் என் பெயரைச் சொல்லி அழைப்பதைப் பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் நான் வெற்றி பெறுவேனா என்பது தெரியாது.
"ஆனால் கோடிக்கணக்கான மக்களிடம் என்னைக் கொண்டுபோய்ச்சேர்த்திருக்கிறது. சினிமா செய்யாததை சின்னத்திரை செய்துள்ளது," என்கிறார் வித்யுலேகா.
ஆச்சி மனோரமா, கோவை சரளா போன்று பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை, லட்சியம் என்று குறிப்பிடுபவர், தமிழில் உரிய வாய்ப்புகள் கிடைக்காமல் எப்படிச் சாதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்.
"ஆச்சி, சரளா மேடம் போன்றவர்களை மனதில் வைத்து, தனியாக நகைச்சுவை பகுதிகளை உருவாக்கினார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு நகைச்சுவை நடிகரை மட்டும் வைத்து முழுப் படத்தையும் முடித்துவிடுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்," என்று ஆதங்கப்படும் வித்யுலேகாவுக்குத் திருமணமாகிவிட்டது.
இடையில் கொஞ்ச காலம் உடல் இளைத்திருந்தவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மீண்டும் நன்றாகத் சாப்பிடத் தொடங்கி, கொஞ்சம் எடை கூடிவிட்டாராம். நகைச்சுவை நடிகைகளுக்கும் அதிக வாய்ப்புகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் வித்யுலேகா.

