நகைச்சுவையும் திகிலும் கலந்த கதைகளில் நடிப்பதில்லை என்று தாம் முடிவு செய்திருந்த நிலையில், '13' படத்தின் கதை அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள படம் '13'. இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பேசிய ஜி.வி.பிரகாஷ், தம்முடைய முதல் படமான 'டார்லிங்' திகில் கதை பாணியில் எடுக்கப்பட்டிருந்தது என்றும் அதன் பிறகு திகில் கதை கொண்ட திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
"தற்போதைய சூழலில் வாரம் ஒரு திகில் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே '13' படத்தயாரிப்பாளர் கதை கேட்க வலியுறுத்தியபோது, திகில் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றேன். குறிப்பாக திகிலும் நகைச்சுவையும் கொண்ட படம் என்றால் அறவே நடிக்க மாட்டேன் என்று கூறினேன். ஆனால் இந்தக் கதையைக் கேட்ட பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன். அந்த அளவுக்கு கதை சுவாரசியமாக இருந்தது," என்றார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

