'ருத்ர தாண்டவம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளையர்களை வளைத்துப்போட வந்திருக்கிறார் தர்ஷா குப்தா. தமிழ், மலையாளம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பேசி அசத்துகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவருக்கு, சமூக ஊடக உலகில் நுழைந்ததும் பலத்த வரவேற்பு. அதன் பலனாக சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன.
"பெண்கள் இப்போது சமூக ஊடகங்களை தங்களுடைய சுய முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். பல பெண்கள் தங்களுடைய கைவினைப் பொருள்களை விற்பனை செய்கிறார்கள். போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன.
"எங்களைப் போன்று மாடலிங், திரைப்படத் துறையில் இருப்பவர்கள் ரசிகர்கள் மனம் கவர சில புகைப்படங்களை, கருத்துகளைப் பதிவிடுகிறோம்," என்கிறார் தர்ஷா.
கொரோனா முடக்க நிலையின்போது சமூக ஊடகங்களில் இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு புகைப்படத்தையும் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் பார்த்துள்ளனர்.
"எனது இன்ஸ்டகிராம் பதிவுகளைப் பார்த்த பிறகே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு வந்தது. சமூக ஊடகங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் நமக்கு நிச்சயம் பலன் உண்டு," என்று சொல்லும் தர்ஷா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தம்மை மேலும் பிரபலமாக்கி உள்ளதாகச் சொல்கிறார்.
சமையல் என்கிற சுமையை இலகுவாக எடுத்துக்கொள்ளலாம் என்று திரையில் காட்டியதால்தான் இந்த நிகழ்ச்சிக்குப் பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதாகக் கூறுபவர், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்தான் திரைத்துறையிலும் தமக்கான வாய்ப்புகள் தேடி வருகிறது என்கிறார். தர்ஷாவை பாதி மலையாளி, பாதி தமிழ்ப் பெண் என்று குறிப்பிடலாம். இவரது தந்தை கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர். தாயாருக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர்.
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கோவையில் தானாம். கணினித் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த கையோடு, பெங்களூருவில் எம்பிஏ பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு பெரிய பள்ளியில் கணினி ஆசிரியையாக வேலை பார்த்தவருக்கு அந்த அனுபவம் மிகவும் பிடித்துப்போனது.
"ஆசிரியையாக மகிழ்ச்சியாக வேலை செய்து வந்தேன். நவீன நாகரிக உடைகள் எந்த அளவுக்குப் பிடிக்குமோ, அதே அளவுக்கு சேலைகள் அணிவதும் பிடிக்கும்.
"ஒருமுறை சென்னையில் உள்ள தோழியைச் சந்திக்க வந்திருந்தேன். அவரது பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி மாடலிங் துறையைச் சேர்ந்தஆவர். என்னைப் பார்த்ததும் மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமா என்று அவர் கேட்க, விடுமுறை நாள்களில் மட்டும் வருகிறேன் என்று நான் பதில் சொல்ல, விளம்பரத்துறையில் நுழைய எனக்கான கதவுகள் திறந்தன," என்கிறார் தர்ஷா.
அதன் பிறகு பல்வேறு விளம்பரங்களில் நடித்து பெயர் வாங்கிய இவருக்கு, 2019ல் 'அவளும் நானும்' என்ற தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. பிறகு 'முள்ளும் மலரும்', 'செந்தூரப்பூவே', 'மின்னலே' என்று பல தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது 'ஓ மை கோஸ்ட்' படத்தில் கல்லூரி மாணவி யாக, கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் தர்ஷா.

