'விக்ரம்' படத்தின் மூன்றாவது பாகத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
நேற்று முன்தினம் 'விக்ரம்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மலேசியாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 'விக்ரம்' படத்தின் மூன்றாவது பாகத்தில் விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், அந்தப் படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என்றார்.
அந்த நாயகன் சூர்யாவா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கமல் அதை மறுக்கவில்லை.
'விக்ரம்' படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கும் படத்தின் மூன்றாம் பாகத்துக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் உள்ளதாகத் தகவல்.
இந்நிலையில், விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் கமல் கூறினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது 'விக்ரம்' திரைப்படம்.
இதற்கிடையே, தமிழில் முன்னணியில் உள்ள அனைத்து கதாநாயகர்களிடமும் கால்ஷீட் கேட்டுள்ளாராம் கமல்.
அவரது படத்தயாரிப்பு நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைய படங்களைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் ஜெயம் ரவி, உடனடியாக தாமே கமலை தொடர்புகொண்டு கால்ஷீட் தருவதாகக் கூறினாராம். அவருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
'விக்ரம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் கமல்.

