தென்னிந்திய நடிகைகள் என்றால் இந்தித் திரையுலகில் அவ்வளவு மரியாதை கிடைக்காது என்று வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார் நடிகை டாப்சி.
தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி, பிறகு வடஇந்தியாவில் காலூன்றிய கதாநாயகி இவர். இன்று ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் டாப்சி. இந்தப் படம் அடுத்த மாதம் வெளியீடு காண உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தப் படம், டாப்சிக்கு சில விருதுகளைப் பெற்றுத்தரும் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். இத்தனைக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் டாப்சிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
"பல கோடி இந்தியர்களைப் போல் நானும் சிறு வயது முதல் கிரிக்கெட் ரசிகை. ஆனால், இந்தப் படத்தில் நடிக்கும் வரை ஒரு முறைகூட கிரிக்கெட் மட்டையை நான் தொட்டதில்லை. மேலும், மித்தாலி ராஜ் பல சாதனைகளைப் புரிந்தவர். அதிகம் பேசாதவர். நானோ வாயைத் திறந்தால் இடைவிடாமல் வளவளவென்றுப் பேசிக்கொண்டே இருப்பேன்.
"அதனால் எனக்குரிய வசனங்களைப் பேசும்போது கூடுதல் நிதானத்தைக் கடைப்பிடித்தேன். எந்தவோர் இடத்திலும் எனது சாயல் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். உண்மையைச் சொல்வதானால் எனது திரை வாழ்க்கையில் நான் மிகவும் சிரமப்பட்டு நடித்த படங்களில் இதுவும் ஒன்று," என்று சொல்லும் டாப்சி, அண்மையில் இந்திய பேட்மிண்டன் அணி தாமஸ் கிண்ணத்தை வென்றபோது மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்.
சமூக ஊடகங்களில் இவர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்க, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர். டாப்சியின் கூடுதல் உற்சாகத்துக்குக் காரணம், அவரது நண்பர் மதியாஸ் போ என்பவர்தான் இந்திய அணியின் பயிற்சியாளர்.
"முன்னாள் டென்மார்க் அணி வீரரான அவர் மிகுந்த திறமைசாலி. அவரது வழிகாட்டுதலில்தான் இந்திய அணி சாதனை புரிந்துள்ளது. எனவே, எனது நண்பரின் வெற்றிக்காகவும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன்," என்று சொல்லும் டாப்சி, இந்தித் திரையுலகில் தென்னிந்திய நடிகைகள் நிலைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார். அண்மைய பேட்டி ஒன்றில், தென்னிந்திய நடிகைகளை அழுகிய தக்காளி போல் இந்தித் திரையுலகத்தினர் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"நான் தென்னிந்தியப் பெண் அல்ல. பஞ்சாபி பெண். இருப்பினும், தென்னிந்திய படத்தில் அறிமுகமாகி, பிறகு இந்திக்குச் சென்றதால் எனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை. நான் நடிக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
"இப்போது எனது அனுபவத்தை நம்பி சொந்தப்படம் தயாரிக்கிறேன். 'ப்ளர்' என்ற அந்த இந்திப்படம் இந்த தலைமுறைக்கான படைப்பு.
"படத்தயாரிப்பு என்பது பதற்றமும் கவலையும் அளிக்கக்கூடிய வேலை. இருப்பினும் அதை ஒழுங்காகச் செய்தால் சம்பாதிக்கலாம். எனக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க மாட்டேன். அவற்றைப் பெறுவதற்குப் போராடுவேன்," என்கிறார் டாப்சி.

