நடிகர் சூரி அளித்த நில மோசடி புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் சென்னை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு விஷ்ணு விஷாலுக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தனர். அதை ஏற்று நேற்று முன்தினம் அவர் நேரில் முன்னிலையானார்.
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ரமேஷ் கொடவாலா பெருந்தொகையை பெற்றுக்கொண்டு தம்மை ஏமாற்றிவிட்டதாக கூறி வருகிறார் சூரி.
இதுதொடர்பாக அவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் நில மோசடி தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே விஷ்ணு விஷாலின் தந்தையிடம் பலமணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்னர் நடிகர் சூரியிடமும் விசாரணை நடத்தியது.
காவல்துறையினர் எழுப்பிய நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சூரி பதிலளித்துள்ளார். இதற்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மூன்று முறை முன்னிலையானார். இந்நிலையில், தற்போது விஷ்ணு விஷாலிடமும் விசாரணை நடந்துள்ளது. நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தியதாகவும் அப்போது நிறைய கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

