'யானை' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் அருண் விஜய்.
பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தாம் இதுவரை நடித்த படங்களில் அதிக பொருள் செலவில் உருவான படம் இதுதான் என்கிறார் அருண் விஜய்.
"இந்தப் படத்தை கொரோனா நெருக்கடிக்கு இடையே மிகவும் சிரமப்பட்டு உருவாக்கி உள்ளோம். குடும்ப உணர்வுகளும் அடிதடி சண்டைக்காட்சிகளும் நிறைந்த படமாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் ஹரி. "மூன்று நிமிடங்களுக்கு இடைவிடாமல் படமாக்கப்பட்ட இரண்டு சண்டைக்காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவற்றைப் பொருட்படுத்தாமல் இந்த சண்டைக்காட்சிகளில் நடித்து முடித்துள்ளேன்.
"திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களுக்கான இடத்தைப் பிடித்துவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. அதற்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். எனது மைத்துனராக இருந்தாலும் இயக்குநர் ஹரியே இப்போதுதான் என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். இன்னும் நீண்ட தூரத்தைக் கடக்க வேண்டி உள்ளதாக உணர்கிறேன்.
"'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்தபோது, ஒருவேளை எனது முடிவு தவறாக அமைந்துவிட்டால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வேண்டியிருக்கும் என்ற பயம் இருந்தது. ஆனால் அப்படம் என் பாதையை மாற்றி அமைத்தது. "இப்போது மக்கள் மனதில் எனக்கென தனி இடத்தை பிடித்திருந்தாலும், ஒரு முழுமையான வெற்றிக்காக தொடர்ந்து போராடுகிறேன்," என்கிறார் அருண் விஜய்.

