'விக்ரம்' படத்தில் மட்டுமல்ல, தனது கணவர் பகத் ஃபாசில் ஏற்று நடித்த அனைத்து வில்லன் கதாபாத்திரங்களுமே தமக்குப் பிடித்தமானவைதான் என்கிறார் நஸ்ரியா.
மீண்டும் நடிக்கத் தொடங்கிய பிறகு தமக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார்.
இவர் நடித்த 'அடடே சுந்தரா' தெலுங்குப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு கண்டுள்ளது.
இப்படத்தின் அறிமுக நிகழ்வுக்காக சென்னை வந்தவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழில் நடிக்க விரும்புவதாகவும் தனக்கேற்ற கச்சிதமான கதாபாத்திரம் அமைய காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழில் இவர் நடித்துள்ள 'திருமணம் என்னும் நிக்காஹ்' உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நல்ல நடிகை என்று பெயரெடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு விலகினார்.
இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருப்பதாகவும் ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறுகிறார்.
"கதை கேட்கும்போது நான் மொழியை மனதில் வைத்துக் கேட்பதில்லை. நான் கேட்ட கதை எனக்குப் பிடித்துவிட்டால் உடனடியாக அதில் நடிக்க ஒப்புக்கொண்டு விடுகிறேன். அப்படித்தான் 'அடடே சுந்தரா' தெலுங்குப் படத்தை ஒப்புக்கொண்டேன்.
"படத்தின் நாயகன் நானி என்பது ஒரு முக்கிய காரணம். அவருடைய கதைத் தேர்வுகளும் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். தெலுங்கு சினிமாவில் இருக்கும் ஒரு மலையாள நட்சத்திரம் என்று அவரை நான் நினைத்துக்கொள்வேன்.
"நானியுடன் நடிக்கும்போது நம் வீட்டில் உள்ள ஒருவருடன் நடிப்பது போலவே உணர்ந்திருக்கிறேன். மிகவும் இளகிய இதயம் கொண்டவர். படக்குழுவில் ஒவ்வொருவரையும் மிகவும் கௌரவமாக நடத்துபவர். 'அடடே சுந்தரா' படத்தில் பிராமண வீட்டுப் பையனாக அவரும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவளாகவும் நடித்துள்ளோம்.
"எங்களுடைய காதலை இரு குடும்பங்களும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதையும் அப்போது நடக்கும் களேபரங்களையும் இந்தப் படத்தில் சித்திரித்துள்ளோம். காதலும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் இருக்கும். மேலும் பல சுவாரசியமான அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது," என்று சொல்லும் நஸ்ரியா, படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிவிட்டால், சினிமா குறித்து எதுவும் பேசமாட்டாராம்.
கணவர் பகத் ஃபாசிலும் இதே கொள்கையைப் பின்பற்றுவதால் வசதியாக உள்ளதாம். இருவருமே திரையுலகில் இருப்பதால் இப்படியொரு கொள்கை இருப்பது நல்லது என்கிறார்.
"இருவருமே நடிகர்கள் எனும்போது, தினமும் 12 முதல் 18 மணி நேரம் படப்பிடிப்பில் இருந்துவிட்டுத்தான் வீடு திரும்புகிறோம். பிறகு வீட்டிலும் சினிமாவைப் பற்றி பேசினால் அது சரியாக இருக்காது.
"என் கணவர் கதாநாயகன், வில்லன் என எந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும் அதை கதாபாத்திரமாக மட்டுமே பார்ப்பார். வில்லன் என்றால் அதில் நடிப்புத்திறமையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்பார்.
"அவரது வில்லன் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனினும், மற்றவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற காட்சிகளில் நடிப்பதை சற்றே குறைத்துக்கொள்ளும்படி அவரிடம் அடிக்கடி கூறுகிறேன். அதேசமயம் சினிமாவில் சிலவற்றைத் தவிர்க்க இயலாது என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
"மொத்தத்தில் என் கணவர் திரையில் தோன்றும் நல்ல வில்லன்," என்கிறார் நஸ்ரியா.
திரைப்படக் கலைஞர்கள் என்ற வகையில், இவரும் பகத் ஃபாசிலும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினார்களாம். நேரில் பார்க்கும்போது ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ள, நட்பு மேலும் நெருக்கமாகி தொலைபேசியிலும் உரையாடல்கள் தொடர்ந்துள்ளன.
"ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட பிறகே காதலைப் பரிமாறிக்கொண்டோம். நாங்கள் காதலிப்பது தெரிந்ததும் இரண்டு தரப்பு பெற்றோருமே எங்களை அங்கீகரித்தார்கள். அதனால் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
"சமூக ஊடகங்கள் வழியாக ரசிகர்களுக்கு என் வாழ்க்கையின் ஒவ்வொரு நல்ல தருணத்தையும் தெரியப்படுத்துகிறேன். ரசிகர்கள் நல்ல புரிதல் கொண்டவர்கள். அவர்களின் அன்பு, ஆதரவால்தான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன்," என்கிறார் நஸ்ரியா.
இரண்டாவது சுற்றில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் தமது விருப்பம் என்றும் அது கிடைக்கும் வரை காத்திருக்கப் போவதாகவும் சொல்கிறார் நஸ்ரியா.
, :

