சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள 'மாயோன்' திரைப்படம் விரைவில் திரைகாண உள்ளது.
இந்நிலையில், படத் தலைப்பைப் பார்த்துவிட்டு இது சாமி படம் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிடக்கூடாது என சிபிராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதையும் தாண்டி வேறு பல அம்சங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தான்யா ரவிச்சந்திரன் முதல் முறையாக சிபியுடன் இணைந்து நடித்துள்ளார்.
மாறுபட்ட திரைக்கதையுடன் ஆன்மிகம், அறிவியல், சிலைக்கடத்தல், புதையல் வேட்டை என பரபரப்பான திகில் படமாக தயாராகி வருகிறது 'மாயோன்'.
இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் எழுதியுள்ளார். என்.கிஷோர் இயக்கி உள்ளார்.
"இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு புதிய களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் பொருத்தமாக அமைந்தார்கள். எல்லோரும் சேர்ந்து நிறைய உழைத்து இருக்கிறோம். இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதை எங்களுக்குக் கிடைத்த வரம் என்றுதான் கூற வேண்டும். படத்தின் கதை, நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும் எளிதில் புரியக்கூடியதாக இருக்கும்.
"இண்டியானா ஜோன்ஸ்', 'டாவின்சி கோட்' போன்ற படங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோன்ற ஒரு கதையில் நடிக்கவேண்டும் என்ற எனது நீண்டகால ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியது. இது சாமி படம் அல்ல. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது," என்கிறார் சிபிராஜ்.

