ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டே அடுத்து நடிக்க உள்ள மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ்.
இவர் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு தனுஷ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பாரதிராஜாவும் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
கதைப்படி, அனுஷா என்ற கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவும் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கரும் ஷோபனாவாக நித்யா மேனனும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்துக்கு நீலகண்டன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான 'மாறன்' படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் வெளியீடு என்பதால் 'திருச்சிற்றம்பலம்' படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறாராம் தனுஷ்.
'அரபிக்குத்து' பாடலுக்கு நடனம் அமைத்துள்ள ஜானி மாஸ்டர் இந்தப் படத்திலும் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளதாகத் தகவல். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் இளையர்களை நிச்சயம் கவரும் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ள தனுஷ், அதற்கான கதையை எழுதி முடித்துவிட்டாராம்.

