'வள்ளி மயில்' படத்துக்கான கதையை எழுதி முடிக்க தமக்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
இவரது இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் இது. அடிதடியும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் இருக்குமாறு இப்படத்தை இயக்கி உள்ளார் சுசீந்திரன்.
கதைக்களம் திண்டுக்கல் என்பதால் அங்கு ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைத்து, படத்தின் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். சில முக்கிய காட்சிகளை டெல்லியிலும் சென்னையிலும் படமாக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி நேற்று முன்தினம் வெளியானது. இந்நிகழ்வில் பேசிய சுசீந்திரன், 'வள்ளி மயில்' படம் இந்தியத் திரையுலகில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்றார்.
"சில படங்களைப் பார்க்கும்போது அவற்றின் கதையோடு நம் வாழ்க்கையையும் பொருத்திப் பார்க்க முடியும். இதனால் படத்துடனான நெருக்கம் அதிகரிக்கும். இதுவும் அப்படிப்பட்ட படம்தான்.
"படத்துக்கு வலுசேர்க்கும் அம்சமாக டி.இமானின் இசை அமைந்துள்ளது. அவருடன் ஒன்பது படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் கடினமான உழைப்பாளி. அவரைப் போலவே இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
"இப்படத்தின் கதையை நான்கு ஆண்டுகளாக எழுதி வந்தேன். கதையைக் காட்சிப்படுத்த கடும் உழைப்பு தேவைப்பட்டது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர்தான் இந்தப்படத்தின் உயிர். பல மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது," என்கிறார் சுசீந்திரன்.

