சவால்களைத் தாம் மிகவும் நேசிப்பதாகவும் சவால்கள் இல்லாத வாழ்க்கை போரடித்துவிடும் என்றும் சொல்கிறார் நடிகை சாய் பல்லவி.
பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும்போது எழக்கூடிய சவால்களை ஒரு நடிகையாக தாம் மிகவும் ரசிப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நடிகை என்ற வகையில் எப்போதும் ஒருவித அழுத்தத்துடன் இருக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை, அதன் வலியை என்னால் உணர முடியும்.
"எனது முந்தைய படங்களில் இதைக் கவனித்திருப்பீர்கள். நான் நடித்துள்ள சில கதாபாத்திரங்களுக்கு கவர்ச்சி, செயற்கை அழகு ஆகியவை தேவைப்படவில்லை. எல்லாமே இயல்பானதாக அமைந்திருக்கும்," என்கிறார் சாய் பல்லவி.
இவ்வாறான கதாபாத்திரங்களில் நடிப்பதால் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சிலர் கூறுவதை தம்மால் ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் இதுவரை இணைந்து நடித்த எந்த கதாநாயகனும் இதுகுறித்து கேள்வி எழுப்பியதில்லை என்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை ரசிகர்களின் ஆதரவும் அன்பும் மிக முக்கியம். அவர்களின் அன்பை அனைத்துக்கும் மேலானதாகக் கருதுகிறேன்.
"அர்த்தமுள்ள கதாபாத்திரங்களும் திரைப்படங்களும்தான் என்னுடைய இலக்கு.
"சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். அவரது படங்கள் குறித்து இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
"அப்படிப்பட்ட படைப்புகளில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
"சில இயக்குநர்களும் கதாசிரியர்களும் என்னை மனதில் வைத்து சில கதைகளை எழுதியதாகச் சொல்லும்போது பெருமையாக உணர்கிறேன்.
"காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சவாலான முயற்சிகளில் துணிச்சலுடன் ஈடுபடுகிறேன்," என்று சொல்லும் சாய் பல்லவி, அடுத்து 'விராட பருவம்' தெலுங்குப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளாராம்.
உண்மையாகவும் கடமையை உணர்ந்தும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று குறிப்பிடுபவர், அத்தகைய முயற்சிகளை ரசிகர்கள் திறந்த மனதுடன் வரவேற்பார்கள் என்கிறார்.
அதேசமயம் ரசிகர்களின் போக்கு எப்படிப்பட்டது, அவர்களுக்கு எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என்பதை மட்டும் கணிக்கவே இயலாது என்று சொல்லும் சாய் பல்லவி, கலைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என அறிவுறுத்துகிறார்.
இவரது நடிப்பில் தமிழில் அடுத்து வெளியாகும் படம் 'கார்கி'.
"அருமையான கதையுடன் உருவாகி வருகிறது இப்படம். என் மனதுக்கு நெருக்கமான கதை எனலாம். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்க முடியும். கொரோனா நெருக்கடி வேளையில்தான் படமாக்கினோம்.
"ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறேன். தெலுங்கிலும் தமிழிலும் சில கதைகளைக் கேட்டு முடித்துள்ளேன். விரைவில் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்," என்கிறார் சாய் பல்லவி.
தாம் வன்முறையை அறவே வெறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வன்முறை மூலம் சாதிக்க முடியும் எனத் தாம் நம்பவில்லை என்கிறார்.
முடிந்தவரை யாரையும் எந்த வகையிலும் காயப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதுதான் சாய் பல்லவியின் கொள்கை.
"அண்மையில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் அங்குள்ள பண்டிட் இன மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அதை மத மோதல்களாகப் பார்க்கிறோம்.
"என்னைப் பொறுத்தவரை அனைவரும் முதலில் மதங்களைக் கடந்து மனிதர்களாக இருக்க வேண்டும்,'' என்கிறார் சாய் பல்லவி.
அவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதேசமயம் சாய் பல்லவிக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் கிளம்பியுள்ளது.
, :

