மற்ற துறைகளைப் போல் திரைத்துறையிலும் பலவிதமான சிக்கல்கள், சவால்கள் உள்ளபோதிலும், திறமை இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் கியாரா அத்வானி.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தித் திரையுலகில் அறிமுகமான இவருக்கு திரைப்பயணத்தின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
கியாரா நடித்து 2014ஆம் ஆண்டு வெளியான 'ஃபஹ்லி' இந்திப் படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெறாததால் மனம் உடைந்து போயிருக்கிறார்.
ஓரளவு பழகிய சில திரையுலக நண்பர்கள்தான் பலவிதமாகப் பேசி தன்னம்பிக்கையூட்டி உள்ளனர்.
"வணிகப் படங்களில் நடிப்பதோ, மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடிப்பதோ நமக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில்லை. மாறாக, நன்றாக நடிப்பதுதான் நமக்கான இடத்தைப் பெற்றுக்கொடுக்கும் என்று மூத்த கலைஞர்கள் சிலர் கூறினர்.
"அவர்கள் கூறிய வார்த்தைகள் வாழ்க்கை, தொழில் மீதான பிடிப்பை வலுப்படுத்தின. முதல் தோல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நடைபோட்டேன்.
"இன்று நான் நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக வரிசையில் காத்துக்கிடக்கின்றன," என்கிறார் கியாரா.
இதுவரை தாம் நடித்த படங்களை தனிப்பட்ட வகையில் ஆய்வு செய்து பார்த்தால், தமது திறமை, துணிச்சல் எனப் பல்வேறு அம்சங்கள் அதிகரித்துள்ளதாக உணரத் தோன்றுகிறது என்று குறிப்பிடுபவர், தாம் எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை என்கிறார். அதேசமயம் அதிர்ஷ்டமும் தமக்கு கைகொடுத்ததாக நம்புகிறார்.
"நல்ல நடிகராக இருந்தால் மட்டுமே நீங்கள் இங்கு தாக்குப்பிடிக்க முடியும். இப்போது எனது படங்களைப் பின்னோக்கி பார்த்தால், எனது நடிப்புக்காக பல பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். அவை அனைத்துமே உண்மையான பாராட்டுகள். போலிகளையும் உண்மையற்ற பாராட்டுகளையும் நான் அறவே பொருட்படுத்துவது இல்லை.
"வித்தியாசமான கதைக்களங்கள், கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன. இதற்கு நான் காரணமல்ல. அனைத்து வாய்ப்புகளுமே தன்னால் தேடி வருகின்றன.
"நான் ஏதோ கவனமாகக் கதைகேட்டு, என் அனுபவத்தை வைத்து கதைகளைத் தேர்வு செய்வதாக நினைக்கிறீர்கள் எனில், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். அதனால்தான் நான் முயற்சி செய்யாமலேயே நல்ல விஷயங்கள் நடக்கின்றன," என்கிறார் கியாரா அத்வானி.
'கபீர் சிங்', `குட் நியூஸ்', 'கில்ட்டி' என்று கியாரா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்திலுமே இவரது நடிப்பு தனித்தன்மையுடன் இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
அந்தப் பாராட்டும் அதற்காக தாம் கொட்டிய உழைப்பும்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.
கியாரா நடித்து முடித்துள்ள இரண்டு இந்திப் படங்கள் ஜூன் 20, ஜூன் 24 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
"எனது நடிப்புத் திறமையை பெரிதாக வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. சிறிய, பெரிய கதாபாத்திரங்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். தவிர, எனது கதாபாத்திரத்துக்கும் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றும் ஒருபோதும் எதிர்பார்த்தது் இல்லை.
"ஆனாலும்கூட எனது நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. அதற்காக என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் ," என்கிறார் கியாரா அத்வானி.
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளதாகக் குறிப்பிடுபவர், தென்னிந்தியாவில் அண்மைக்காலமாக உருவாகி வரும் திரைப்படங்கள் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்கிறார்,
கோலிவுட், டோலிவுட்டில் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது என்று சொல்லும் கியாரா, விரைவில் அங்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் என நம்புகிறாராம். காரணம், தமிழில் நடிக்க புதுக் கதைகளை தொடர்ந்து கேட்டு வருகிறாராம்.
மிக விரைவில் தென்னிந்திய இளையர்களின் தூக்கம் கெட்டுப்போகும் என்பது உறுதியாகிவிட்டது.

