'டி பிளாக்' திரைப்படத்தில் முறுக்கு மீசையுடனும் மிரட்டும் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார் அருள்நிதி. அதுமட்டுமல்ல, முதன்முறையாக இதில் கல்லூரி மாணவராகவும் நடித்துள்ளார்.
விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி உள்ள படம் இது. திகில், நகைச்சுவை எனப் பல்வேறு அம்சங்கள் இருக்குமாம்.
"தோற்றத்தை சற்றே மாற்றிக் கொண்டேன். உடனே தெரிந்தவர்கள், ரசிகர்கள் என்று பலரும் இதென்ன வித்தியாசமான கதாபாத்திரம் என்று கேட்கிறார்கள். நான் கமல் சார் அல்ல.
"படத்துக்குப் படம் என்னால் தோற்றத்தை மாற்ற இயலாது. ஏதோ முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன். எனக்கான பாத்திரம் மனநிறைவு அளித்ததால் முரட்டு மீசை வைக்க சம்மதித்தேன்.
"மேலும் 'கொம்பன்' படத்தின் கதையை முதலில் எனக்குத்தான் சொன்னார் இயக்குநர். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலையில், அந்தக் கதையில் நடிக்க முடிய வில்லை. ஆனால், படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது. நிச்சயம் இதில் கார்த்தி சார் தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது.
"சரி இப்போதாவது வித்தியாசமாகக் காட்சியளிப்போம் என முயற்சியைத் தொடங்கி உள்ளேன். எனக்கு கிராமத்து தோற்றம் பொருத்தமாக இருப்பதாக சிலர் சொன்ன பிறகே நிம்மதியாக உணர்ந்தேன்," என்கிறார் அருள்நிதி.
கல்லூரி மாணவராக நடிக்க முதலில் தயங்கினாராம். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா எனும் அச்சமே இதற்குக் காரணம்.
"ஆனால் இயக்குநர் விடுவதாக இல்லை. அவர் கொடுத்த ஊக்கத்தால் உடல் எடையைக் குறைத்து, கல்லூரி மாணவரின் தோற்றத்துக்கு மாறினேன்.
"கதைக்களம் கோயம்புத்தூர். கல்லூரி மாணவிகளுக்கான விடுதியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள்தான் கதை.
"இயக்குநரின் சகோதரி படித்த கல்லூரியில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை எடுத்துக் கொண்டு, மேலும் சில திகிலான விஷயங்களையும் சேர்த்து திரைக்கதையை அமைத்துள்ளார்," என்கிறார் அருள்நிதி.

