இன்றைய தேதியில் தமிழ் கதாநாயகிகளில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர் எனலாம்.
நடிப்பில் எந்தக் குறையும் வைக்காதவர், படம் வெளியாகும் வரை தம்மால் முடிந்த பங்களிப்பை தயக்கமின்றித் தரக்கூடியவர், அனைவருடனும் இயல்பாகப் பழகக்கூடியவர் என்று கோடம்பாக்கத்தில் நற்பெயரை சம்பாதித்து வைத்துள்ளார் பிரியா.
"அனைவரையும் மதித்துப் பேசிப் பழகும் குணம்தான் 'யானை' படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய நான் முடிவெடுக்கக் காரணம்," என்கிறார் இயக்குநர் ஹரி.
அருண் விஜய் நாயகனாக நடிக்க, ஹரி இயக்கி உள்ள இந்தப் படம் விரைவில் திரைகாண உள்ளது. இந்நிலையில், பிரியா மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் கதாநாயகி என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் ஹரி.
"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், பிரியாவை கதாநாயகியாக பரிசீலிக்கவே இல்லை. இதற்கு முன்பு நான் இயக்கியுள்ள படங்களில் நடிகர், நடிகையர் குறித்து அதிகம் யோசிக்க மாட்டேன். ஆனால் இம்முறை 'யானை' படத்துக்காக சின்னச்சின்ன விஷயங்களிலும்கூட அதிகம் மெனக்கெட்டுள்ளேன்.
"மற்ற கதாபாத்திரங்களுக்கு உரியவர்களை முன்பே முடிவு செய்துவிட்டாலும், நாயகியை மட்டும் உறுதி செய்யவில்லை. பல நடிகைகளைப் பரிசீலித்த போதிலும் எனக்கு மனநிறைவு ஏற்படவில்லை," என்கி்றார் இயக்குநர் ஹரி.
அவர் வைத்திருந்த நாயகிகளின் பட்டியலில் பிரியாவின் பெயர் இல்லையாம். ஆனால் திடீரென்று நிலைமை தலைகீழாக மாறிஉள்ளது.
தன் படத்துக்கான நாயகியை ஹரி தேடிக்கொண்டிருந்த வேளையில்தான் அருண் விஜய் நடித்த 'மாஃபியா' படம் வெளியானது.
உடனடியாக அடுத்த படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர முடியாது எனக் கருதியுள்ளார் இயக்குநர் ஹரி.
"அந்தச் சமயத்தில் நானும் எனது மனைவியும் ஹைதராபாத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது விமான நிலையத்தில் பிரியாவைச் சந்தித்தோம்.
"அவரும் என் மனைவியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிரியாவின் முக பாவங்களையும் உடல்மொழியையும் கவனித்தபோது, எனது கதையின் நாயகியான மலர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
"மேலும் இது மண் சார்ந்த கதை என்பதால் அதற்கேற்ற முக அமைப்பும் பிரியாவிடம் இருப்பதைக் கவனித்தேன்.
"அதன் பிறகு அவரிடம் கதையை மேலோட்டமாகச் சொல்லி, அவரும் ஒப்புக்கொண்டு படத்தில் நடித்து வருகிறார்.
"நடிப்பைப் பொறுத்தவரை நூறு விழுக்காடு அல்ல, அதைவிட இரு மடங்கு நன்றாக நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது அவரிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு நினைத்ததைவிட பல மடங்கு நன்றாகச் செய்தார்," என்று ஹரியின் பாராட்டுப் பத்திரம் சற்று நீளமாக உள்ளது.
சரி.. பிரியா என்ன சொல்கிறார்?
ஹரி போன்ற அனுபவ இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது கிடைக்கும் அனுபவம் தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒன்று என்கிறார் பிரியா.
"ஹரி சார் மிக சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவரது வேகத்துக்கு ஈடுகொடுப்பது கடினம். ஆனால் எப்படியாவது அதைச் சாதித்துவிட்டால் போதும். நம் நடிப்பும் திறமையும் தன்னால் வெளிப்பட்டு நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும்," என்கிறார் பிரியா.
தற்போது ஏழெட்டுப் படங்களில் நாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர், நல்ல கதையும் கதாபாத்திரமும் அமையவில்லை என்றால் எந்தத் தயக்கமும் இன்றி தேடி வரும் வாய்ப்புகளை உதறிவிடுவதாகத் தகவல்.
பிரியா பவானி சங்கர் தற்போது 'இந்தியன்-2', 'பத்து தல', 'திருச்சிற்றம்பலம்', 'ருத்ரன்', 'அகிலன்', 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். நாயகியை மையப்படுத்தும் கதைகளும் அவரைத் தேடி வருகின்றனவாம்.
அண்மையில் இவர் நாயகியாக நடித்த 'பிளட் மணி' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
"நல்ல படம் என்றாலும் பெரிதாகப் பேசப்படவில்லை என்ற வருத்தம் உள்ளது. சில சமயங்களில் நல்ல படைப்புகளுக்கும் கூட விளம்பரம் தேவைப்படுகிறது," என்கிறார் பிரியா பவானி சங்கர்.
பிரியா பவானி சங்கர்

