திருமணத்துக்குப் பிறகும் 'கயல்' ஆனந்திக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. ரக்ஷிதா என்ற இயற்பெயருடன் திரையுலகில் நடிக்க வந்தவருக்கு ஆனந்தி என்ற புதிய பெயரைச் சூட்டி தனது படத்தில் நாயகியாக நடிக்க வைத்தார் இயக்குநர் பிரபு சாலமன்.
'பரியேறும் பெருமாள்' படத்தின் 'ஜோ', 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' படத்தின் 'கமலி' எனப் புதுப்புது கதாபாத்திரங்களும் அடையாளங்களும் கிடைத்தாலும்கூட 'கயல்' ஆனந்தி என்றுதான் ரசிகர்கள் இவரது பெயரைக் குறிப்பிடுகிறார்கள்.
இதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறும் ஆனந்தி, அனைத்து பாராட்டுகளும் பிரபு சாலமனைத்தான் போய்ச்சேர வேண்டும் என்கிறார்.
"'உங்களுடைய பெற்றோர் வைத்த பெயர் ஒரு சினிமா கதாநாயகியின் பெயர்போல் உள்ளது. ஆனால், நீங்களோ தமிழ்நாட்டுப் பெண் போல் இருக்கிறீர்கள். எனவே ஆனந்தி என உங்களுக்குப் பெயர் வைக்கிறேன்' என்றார் பிரபு சாலமன் சார்.
"என் பெயரை மாற்றப்போவதாக அவர் சொல்லவே இல்லை. 'கயல்' படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போதுதான் பெயர் மாற்றப்படும் விவரத்தை தெரிந்து கொண்டேன். அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.
"என்றாலும் ரசிகர்கள் இன்னும் 'கயல்' ஆனந்தியாகவே என்னைப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. அதேசமயம் கமலியும் ஜோவும்கூட என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான்," என்கிறார் ஆனந்தி.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டபோதிலும் ரசிகர்கள் சிலர் இன்னும்கூட இந்தத் தகவலை நம்ப மறுக்கிறார்கள். அவ்வப்போது சமூக ஊடகங்களில், 'திருமணமாகிவிட்டதாகப் பொய் சொல்கிறீர்கள்' என்று பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.
"கணவரின் பெயர் சாக்ரடீஸ் என்பதால் என் மகனுக்கும் கிரேக்க தத்துவ ஞானியான பிளாட்டோவின் பெயரை வைக்க ஆசைப்பட்டார். 'பிளாட்டோ நன்மாறன்' என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.
"எனக்குத் திருமணமாகிவிட்டது என்கிற உணர்வை கணவர் வீட்டார் அறவே கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக அன்பாக, பாசமாக நடத்துகிறார்கள். எனது யோசனைகளை மதிக்கிறார்கள்.
"நானும் என்னை ஒரு நட்சத்திரம் என்று எண்ணிக் கொள்வதில்லை. ரசிகர்களில் ஒருத்தியைப்போல் அவர்கள் வீட்டுப் பெண்போல் இருக்கவே விரும்புகிறேன்.
"எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை தமிழ், தெலுங்கு சினிமா இயக்குநர்களும் கூட நம்பத் தயாராக இல்லை. எப்போதும்போல் எனக்கு சிறந்த கதாபாத்திரங்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு கைமாறாக, அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் கண்ணியத்தையும் நல்ல நடிப்பையும் எனது கதாபாத்திரங்கள் வழியாகக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என்கிறார் ஆனந்தி.
இவரது நடிப்பில் தமிழில் அண்மையில் உருவான படம் 'டைட்டானிக்'. முதன் முறையாக இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்காக குத்தாட்டம் போட்டுள்ளார்.
இயக்குநர்களின் நாயகி என்று பெயர் வாங்கிய நடிகைகளில் ஆனந்தியும் ஒருவர்.
ஒரு நடிகையாக வெவ்வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறார்.
"இயக்குநர்கள் ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுவர். இயக்குநர் பிரபு சாலமன் தாம் விவரித்த, எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு காட்சியும் வர வேண்டும் என்று நினைப்பார்.
"நாம் வேறு மாதிரி நடிக்க முற்பட்டால், 'நான் உருவாக்கிய 'கயல்' இப்படிச் செய்யமாட்டாள். அவள் இன்னும் ரொம்பக் கீழே இருக்கும் சாமானியப் பெண்' என்று சொல்வார். அவரைப் போன்றவர்களிடம் இயக்குநரின் நடிகையாக இருந்துவிடுவதே சரி.
"இயக்குநர் வெற்றிமாறன் சார் இதற்கு நேரெதிர். இந்தக் கதாபாத்திரத்தை மனதில் எப்படிக் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்களோ, அப்படியே வெளிப்படுத்துங்கள் என்பார்.
"இப்படி இயக்குநருக்கு இயக்குநர் சில விஷயங்களில் நாம் மாறுபட வேண்டியிருக்கும். இயக்குநரின் பாணி மட்டுமே மாறுபடுகிறதே தவிர, அவர்களிடம் இருந்து நிச்சயம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். திரையுலகில் அறிமுகமான நாள் முதல் நான் இதைச் செய்து வருகிறேன்," எனகிறார் ஆனந்தி.
திரையுலகில் சம்பாதித்ததை வைத்து ஆனந்தி நகைக்கடை திறந்திருப்பதாக வெளியான தகவலில் பாதி மட்டுமே உண்மையாம்.
"நான் நகைக்கடை நடத்த வில்லை. என் தந்தையின் கடை அது. நான் முதலீடு மட்டுமே செய்கிறேன். ஒரு கட்டத்தில் முதலீடு போதும், படம் தயாரிக்கலாமா என்று அப்பா கேட்டார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெரியாத துறையில் கால்பதிக்க விரும்பவில்லை," என்கிறார் ஆனந்தி.
'கயல்' ஆனந்தி
, :

