விவாகரத்துக்குப் பிறகு தமது குழந்தைகளுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் நல்ல தந்தையாக உள்ளார் என்றும் குழந்தைகளுக்கு எந்தவித குறையும் வைக்கவில்லை என்றும் கூறுகிறார் லலிதாகுமாரி.
பிரகாஷ்ராஜ், லலிதாகுமாரி தம்பதியர்க்கு மூன்று குழந்தைகள். அவர்களில் ஐந்து வயது மகன் விபத்தில் இறந்தார். அதன் பின்னர் இரு மகள்களின் மீதும் மிகுந்த பாசம் காட்டி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு லலிதாகுமரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ்ராஜ். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக விளக்கமும் அளித்தார்.
பின்னர், இந்தி திரையுலகில் பணியாற்றி வந்த நடன இயக்குநர் போனி வர்மாவுக்கும் பிரகாஷ்ராஜுவுக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது முதல் மனைவி குறித்தும் அவருடனான விவாகரத்து பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
"என் மனைவி லலிதாகுமாரிக்கும் எனக்கும் இடையே சில பிரச்சினைகள் இருந்தன. அதனால் நீதிமன்றத்தை அணுகி முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளோம்.
"எனினும் நான் என் மனைவியை மட்டுமே விவாகரத்து செய்தேன். என் குழந்தைகளின் தாய்க்கு விவாகரத்து தரவில்லை. அதேபோல் எனது தாயாரும் மருமகளை விவாகரத்து செய்யச் சொல்லவில்லை," என்று பிரகாஷ்ராஜ் கூறிஉள்ளார்.
அவரது இந்தப் பேட்டி லலிதாகுமாரியை நெகிழ வைத்துள்ளது. அண்மைய பேட்டியில் அவரும் தன் முன்னாள் கணவரைப் பாராட்டி உள்ளார்.
"இருவரும் பிரிந்து வாழ்கிறோம் என்றாலும் குழந்தைகளின் நலனில் எந்தக் குறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம். எங்களுடைய குழந்தைகளுக்கு நாங்கள்தான் அப்பா, அம்மா என்பதில் தெளிவாக இருந்தோம். இப்போது வரை குழந்தைகளை அவர் நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறார்.
"குழந்தைகள் விஷயத்தில் எது நடந்தாலும் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று பேசிக்கொண்டோம். அதன்படியே நடந்து கொள்கிறோம்," என்று சொல்லும் லலிதாகுமாரி, பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையாவார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்', 'புதுப்புது அர்த்தங்கள்', 'புலன் விசாரணை' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அச்சமயம் பிரகாஷ்ராஜுடன் காதல் மலர்ந்தது, அது திருமணத்தில் முடிந்தது. அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார் லலிதா குமாரி.