தெலுங்கு தேசத்தில் இருந்து தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் ஃபரியா அப்துல்லா. சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் 'வள்ளி மயில்' படத்தில் ஃபரியாதான் கதாநாயகி.
கோவில் திருவிழாக்களின்போது ஏற்பாடு செய்யப்படும் தெருக்கூத்து நாடகங்களில் கதாநாயகியாக நடிக்கும் பெண் வேடத்தில் நடித்திருப்பதாகத் தகவல். மேலும், ஊர் ஊராகச் சென்று நாடகத்தில் நடிப்பவர், இரவில் பல கொலை செய்து பழிதீர்ப்பாராம்.
இதுதான் 'வள்ளி மயில்' படத்தின் கதை என்று சமூக ஊடகங்களில் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஃபரியாவிடம் கேட்டால், கதையை மட்டும் கேட்காதீர்கள் என்கிறார்.
"இப்போதெல்லாம் இயக்குநரைவிட செய்தியாளர்கள் நல்ல கதைகளைச் சொல்வார்கள் போலிருக்கிறது. 'வள்ளி மயில்' படத்தின் கதை எனது கதாபாத்திரத்தை வைத்துப் பின்னப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.
"ஆனால் என் கதை, என்ன கதாபாத்திரம் என்று கேட்டால் அதற்கு இப்போது பதிலளிக்க இயலாது. கதை பற்றி மூச்சுவிடக்கூடாது என்று இயக்குநர் கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார். அந்த உத்தரவை மீற இயலாது," என்கிறார் ஃபரியா.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற 'ஜதி ரத்னலு'தான் இந்தப் புது நாயகி அறிமுகமான படம். அதில் துள்ளல் நடனம், இளமை ததும்பும் நடிப்பு என்று தெலுங்கு ரசிகர்களைக் கிறங்கடித்தவரை, இயக்குநர் சுசீந்திரன் தன் படத்தில் ஒப்பந்தம் செய்து, கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
ஃபரியா என்றால் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று பொருளாம். தன். அம்மாதான் தமக்கு எல்லாமும் என்று நெகிழ்கிறார் ஃபரியா. ஹைதராபாத் இவரது பூர்வீகம்.
சிறு வயது முதலே நடனம், ஓவியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். உயர்நிலைப் பள்ளியில் ஓவியத்தை முதன்மைப் பாடமாக படித்துள்ளார். முறைப்படி நடனம் கற்றுக்கொண்டவர்.
"ஒருமுறை அம்மாவுடன் ஹைதராபாத்தில் ஆங்கில நாடகம் பார்க்கச் சென்றிருந்தேன். அது என்னை வெகுவாகக் கவர்ந்த நாடகம். அதில் நடித்த அனைவருமே மனதில் பதிந்துவிட்டார்கள்.
"அந்தக் கலைஞர்களின் ஒப்பனை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என்று எல்லாமும் இன்று வரை மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது.
"வலிந்து வெளிப்படுத்துவது நடிப்பு அல்ல. நடிக்காமல் இருக்கிறோமே, அதுதான் சிறந்த நடிப்பு என்ற சூட்சமும் அப்போதுதான் புரிந்தது. அந்த வகையில் எனக்கு நடிக்கத் தெரியாது என்பேன்.
"வீடு திரும்பியதுமே அம்மாவிடம் நாடக நடிகையாக விரும்புவதாகச் சொன்னேன். அவர் தடைபோடவில்லை.
"உனக்குத்தான் நன்றாக நடனமாட வருகிறதே, அதனால் நடிப்பும் எளிதில் வந்துவிடும். சரியான முடிவெடுத்திருக்கிறாய் என்பது உன்னுடைய பலம். எனினும் முறையான பயிற்சி இருந்தால்தான் எதையும் கச்சிதமாகச் செய்ய முடியும் என்றார் அம்மா.
"திரையுலகில் யார் வழியையும் நான் பின்பற்றவில்லை. திறமைவாய்ந்த பழம்பெரும் நடிகைகள் தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இளம் நாயகிகள் வரை அனைவரிடத்திலும் உள்ள நல்லவற்றைப் பின்பற்றுகிறேன்.
"எனக்கு அம்மாதான் சிறந்த வழிகாட்டி. அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன்," என்று சொல்லும் ஃபரியா, தமிழில் பேசப் பேசத்தான் அது எவ்வளவு இனிமையான மொழி என்பதை தம்மால் உணர முடிகிறது என்கிறார்.
தன்னுடைய இரண்டாவது தமிழ்ப் படத்தில் நடிக்கும்போது யாருடைய உதவியும் இல்லாமல் தமிழ் பேச முடியும் என நம்புகிறாராம்.
"மொழி தெரிந்து நடித்தால் நிச்சயம் ரசிகர்கள் மனதில் விரைவில் இடம்பிடிக்க முடியும். நடிப்பு, நடனம் ஆகியவற்றில் என்னால் நூறு விழுக்காடு சிறப்பாகச் செயல்பட முடியும். மொழியும் வசப்பட்டுவிட்டால் நடிப்பு மேலும் மெருகேறும் என நம்புகிறேன்.
"ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவதாக நினைக்க வேண்டாம். ஆறு ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்துள்ளேன்.
"மொத்தம் நான்கு நவீன நாடகங்கள். ஒவ்வொரு நாடகத்தையும் 15 முறை அரங்கேற்றி உள்ளோம். மேடை நாடகங்களில் நடிக்க எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரியும்.
"நாடக நடிகையாக நல்ல பெயர் வாங்கியுள்ளேன். அந்த நற்பெயரை திரையுலகிலும் தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் ஃபரியா.
'வள்ளி மயில்' படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி மிகவும் கண்ணிய மானவர் என்றும் 22 நாள்கள் அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்றபோது திரையுலகின் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் சொல்கிறார் ஃபரியா.