சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கும் படம் 'ஓநாய் மனிதனின் கதை'. ரங்கா புவனேஸ்வர் இயக்குகிறார்.
இது முழு நீள திகில் படமாக உருவாகிறது.
இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜாங்கிரி மதுமிதா, இதில் குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
"இன்றைய இளையர்களும் பெரியவர்களும் வித்தியாசமான திகில் படங்களுக்கு நல்ல ஆதரவு அளிக்கின்றனர். அதுபோன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே வியாபாரம் ஆகின்றன.
"எனினும், தரமான படைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது என் கருத்து," என்கிறார் ரங்கா புவனேஸ்வர்.
ஓநாய் மனிதன் எனும் கதைக்களத்தை இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தொட்டதில்லை என்று குறிப்பிடும் அவர், கடந்த 1970களில் இந்தியில் ஓரிரு படங்கள் இதே போன்று உருவாகி உள்ளன என்றாலும், அவை உலகத்தரத்தில் இல்லை என்கிறார்.
"காரணம், அந்நாள்களில் திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் பயன்படுத்தும் போக்கு நிலவவில்லை. இதுபோன்ற திகில் படங்களுக்கு 'கிராஃபிக்ஸ்' தொழில்நுட்பம் மிகவும் அவசியம். அதில் எந்தவிதக் குறையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சில முக்கிய காட்சிகளை ஹாங்காங்கில் வைத்து உருவாக்கினோம்.
"ஓநாய் மனிதன் என்ற கதாபாத்திரத்தை சாதாரணமாக திரையில் காட்டினால் வரவேற்பு இருக்காது. அதனால்தான் மிகவும் மெனக்கெட்டு அந்த பாத்திரத்தின் தோற்றத்தை மிரளவைக்கும் வகையில் உருவாக்கி உள்ளோம்.
"இந்தப் படம் இந்தி திரையுலகில் மட்டுமல்லாமல், உலக சினிமா சந்தையிலும் வியப்புடன் பேசப்படும். 45 நாள்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளோம். தொழில்நுட்பப் பணிகள் முடிவடைந்ததும் படம் திரைகாணும்," என்கிறார் இயக்குநர் ரங்கா புவனேஸ்வர்.
இந்தப் படத்துக்கு அன்வர் கான் தாரிக் இசையமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

