யோகிபாபு நண்பர்களையும் நட்பையும் போற்றக்கூடியவர் என்று பாராட்டுகிறார் நடிகர் நிதின் சத்யா.
இவர் நாயகனாக நடித்துள்ள 'தாதா' என்ற புதிய படம் விரைவில் திரைகாண உள்ளது.
இந்நிலையில், அப்படத்தின் சுவரொட்டி சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் நிதின் சத்யாவைக் காணவில்லை. யோகிபாபு துப்பாக்கியால் சுடும் காட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியாகிவிட்டாராம் யோகிபாபு. உடனடியாக தன் மனதில் இருப்பதை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்தப் படத்தில் என் நண்பர் நிதின் சத்யாதான் நாயகனாக நடித்துள்ளார். நான் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதுபோன்று விளம்பரம் செய்யாதீர்கள், நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் யோகிபாபு.
ஏற்கெனவே, தாம் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த படத்துக்கு, தனது படத்துடன் பெரிதாக விளம்பரம் செய்யப்பட்டபோது, அது தவறு எனக் கண்டித்திருந்தார். ரசிகர்களை ஏமாற்றும் வகையில் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இப்போது கதாநாயகனைப் புறக்கணித்துவிட்டு, தம்மை வைத்து படத்துக்கு விளம்பரம் செய்வது தவறு என்றும் சுட்டிக்காட்டி உள்ளார் யோகிபாபு.
அவரது இந்தச் செயல்பாடு நடிகர் நிதின் சத்யாவை நெகிழ வைத்துள்ளது. யோகிபாபுவைப் போல் ஒரு நண்பர் கிடைப்பது அரிது என்று அவர் கூறியுள்ளார்.
"நண்பனை விட்டுக்கொடுக்காமல், ரசிகர்களையும் விட்டுக்தராமல் செயல்படும் பெரிய மனம் யோகிபாபுவுக்குத்தான் உண்டு. அந்த மனம்தான் அவருக்கு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளது," என்று பாராட்டியுள்ளார் நிதின் சத்யா.

