"செங்கேணியை நினைத்தால் இப்போதும் என்னையும் அறியாமல் கண்களில் நீர் வழியும்," என்கிறார் லிஜோ மோல்.
`ஜெய்பீம்' படத்தைப் பார்த்தவர்களால் அதில் இடம்பெற்றிருந்த செங்கேணி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது. மலையாள நடிகையான லிஜோ மோல் அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார்.
"படம் வெளியீடு கண்ட பிறகும்கூட என்னால் செங்கேணி காபாத்திரத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்தப் படத்துக்காக இருளர் சமூக மக்களுடன் பல நாள்கள் நெருங்கிப் பழகினேன். அவ்வளவு ஏன், அவர்களில் ஒருவராகவே வாழ்ந்தேன் என்பதுதான் சரி.
"செங்கேணியை நினைக்கும்போது உடனே கண்ணீர் பெருக்கெடுக்கும். வீட்டில் தனியாக இருக்கும்போது கதறி அழுததும் உண்டு.
"கடந்த சில தினங்களாகத்தான் இந்த உணர்வுபூர்வமான தாக்கத்தில் இருந்து மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போது அழுகை நிற்கும் என நம்புகிறேன்," என்கிறார் லிஜோ மோல்.
இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடந்துள்ளது. கணவர் அருண் நல்ல நண்பரைப் போல் இனிமையாகப் பழகுவதாகச் சொல்கிறார்.
"என் கணவரும் விரைவில் ஒரு படத்தை இயக்குவார். அதற்கான கதை தயாராகி வருகிறது. இருவரும் நண்பர்களைப் போல் பழகுவதால் வாழ்க்கை இனிக்கிறது," என்கிறார் லிஜோ மோல்.
தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

