நயன்தாராவுடன் தம்மை ஒப்பிடக்கூடாது என்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
தாம் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இதுவரை ஒரு தரப்பினர் தம்மை மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் இது தமக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறி உள்ளார்.
நயன்தாரா தமிழில் நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி மறுபதிப்பில் நடித்துள்ளார் ஜான்வி. இதையடுத்து விமர்சகர்கள் அவரையும் நயன்தாராவையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விமர்சனத்தை நிறுத்தவேண்டும் என்கிறார் ஜான்வி.
"தமிழில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்துக்கும் நான் ஏற்றுள்ள வேடத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் பஞ்சாபில் வசிக்கும் பீகார் மாநிலப் பெண்ணாக நடித்துள் ளேன். நான் பேசும் விதம்கூட வேறு மாதிரியாக இருக்கும்.
"முன்னணி நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது இது முதல் முறையல்ல. எனது முதல் படம் வெளியானபோது, என் தாயாரின் நடிப்போடு என்னை ஒப்பிட்டனர். இதுபோன்ற ஒப்பிடுதலுக்கு நான் பழகிவிட்டேன்," என்கிறார் ஜான்வி.
'பொன்னியின் செல்வன்' படத்தில் சில வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது
இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், "சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"மேலும், இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளார். படம் பார்த்தால்தான் வேறு வரலாற்றுத் தகவல்கள் ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவரும். எனவே படத்தை வெளியிடும் முன்பு எங்கள் தரப்புக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும்," எனவும் வழக்கறிஞர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
'ஃபேமிலிமேன் 2' இணையத் தொடரில் நடித்ததன் மூலம் இந்தியிலும் பிரபலமாகிவிட்ட சமந்தாவுக்கு இந்தியில் பல நல்ல வாய்ப்புகள் தேடிவருகின்றன. 'புஷ்பா' படத்தில் அவர் நடனமாடிய பாடலும் இந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து மூன்று இந்திப் படங்களில் சமந்தா ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல். ரன்வீர் சிங் ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர் இயக்குநர் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான, தர்மா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடிப்பதாகவும் பேசப்பட்டது. கடைசியாக அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார் என்றனர். ஆனால் இவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நடிகை டாப்சி தயாரிக்கும் படத்தில் சமந்தா நடிப்பது உறுதியானது. இதையடுத்தே மூன்று படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ளாராம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் 'மாவீரன்'. இது ரஜினி முன்பு நடித்த ஒரு படத்தின் தலைப்பாகும். இதில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தாம் கவுண்டமணியின் தீவிர ரசிகன் என்று பல மேடைகளில் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்போது அவருடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது என்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
, :

