"நான் நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும்," என்கிறார் விஜய் சேதுபதி.
இது தமக்குப் பிடித்தமான படங்களில் ஒன்று என்றும் அவர் கூறி உள்ளார்.
விஜய் சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் நடித்துள்ள 'மாமனிதன்' படம் கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சீனு ராமசாமி இயக்கிய இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்தனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் இந்தப் படம் வசூலில் குறை வைக்கவில்லை என்கிறார்கள். இந்நிலையில் 'ஓடிடி' தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 'மாமனிதன்'.
இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, இந்தப்படத்தை திரைஅரங்கில் பார்க்கத் தவறியவர்கள், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓடிடி தளத்தில் படத்தைப் பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இந்தப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு கதாநாயகன் ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகி விடுவான். 'மாமனிதன்' படம் தொடர்பாக என்னிடமும் முன்பு நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை.
"ஒரு கதாபாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப திரையில் நடமாட இயலாது. அவ்வாறு நடக்கவேண்டிய அவசியமும் இல்லை.
"சீனு ராமசாமி போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. பின்னணிக் குரல் பதிவின்போது முழுப் படத்தையும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியும் அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. இதுபோன்ற படங்களை ஆதரிக்க ரசிகர்கள் தயாராக உள்ளனர். ரசிகர்களை நாம் ஏமாற்றிவிடக் கூடாது," என்றார் விஜய் சேதுபதி.

