பார்த்திபன் இயக்கியுள்ள 'இரவின் நிழல்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் பிரிகிடா. இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவருகின்றன.
எனினும் பார்த்திபன் அனைத்து விமர்சனங்களையும் பக்குவமாக எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரிகிடா அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையாகி உள்ளது.
இதற்காக அவர் மன்னிப்பு கோரியது ஒருபக்கம் இருக்க, பார்த்திபனும் தனது வருத்தத்தை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்.
'இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், இதுபோன்ற விஷயங்களை சினிமாவில் தவிர்க்க முடியாது என்று பிரிகிடா தன் பேட்டியில் குறிப்பிட்டதுதான் சிக்கலுக்கு விதைபோட்டது. அவருக்கு எதிராக பலரும் குரல் கொடுத்ததுடன், சாதி வெறிபிடித்தவர் பிரிகிடா என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தமக்கு சாதி வெறி இருப்பதாகக் கூறுவது மிகுந்த வேதனை அளித்திருப்பதாகக் கூறுகிறார் பிரிகிடா.
"நான் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் அவ்வளவு பெரிய நடிகையும் அல்ல. 'இரவின் நிழல்' படத்தில் சில முக்கியமான காட்சிகள் ஒரு குடிசைப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு வேறு சில இடங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
"இதை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தோடு, குடிசைப்பகுதியில் எடுக்கப்பட்ட வசனங்களும் காட்சிகளும் 'ராவாக' இருக்கும் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.
"இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். குறிப்பிட்ட ஓரிடத்தை மட்டும் சொன்னதால் பலர் வேதனையடைந்துள்ளனர். அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
"நான் அனைவருக்கும் உதவும் பெண். யார் மனதையும் நோகடிக்கமாட்டேன். ஆனால் பேசத்தெரியாமல் பேசியதால் இப்படியாகிவிட்டதே என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது," என்கிறார் பிரிகிடா. இவரது தந்தை சமூக ஆர்வலர். மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுபவராகவும் உள்ளார். எல்லாரும் சமம் என்பதை சிறு வயதிலேயே தன் தந்தை தமக்கு புரிய வைத்ததாகவும் பிரிகிடா சொல்கிறார்.
பிரிகிடாவை கைது செய் என்ற வாசகம் டுவிட்டரில் வேகமாகப் பரவியதைக் கண்டு தாம் கண்ணீர் விட்டுக் கதறியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தாம் தமிழ்த் திரை உலகில் நாயகியாக அறிமுகமான மகிழ்ச்சியை முழுதாக ஒருநாள் கூட கொண்டாட முடியவில்லை என்கிறார்.
"பூர்வக் குடிகளை நான் அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவள். பூர்வக்குடிமக்களில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
"அவர்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடியவர்கள். மனதில்பட்ட கருத்துகளை முகத்துக்கு நேராகப் பேசுவார்கள். இதையெல்லாம் பார்த்து வளர்ந்த நான் எப்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவேன்?" என்று பதில் கேள்வி எழுப்புகிறார் பிரிகிடா.
இதற்கிடையே படத்துக்கு விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே பிரிகிடா இவ்வாறு பேசியதாகக் கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். மலிவான விளம்பரம் தேடும் அளவுக்கு இரவின் நிழல் மோசமான படைப்பல்ல என்றும் இது உலகத் தரத்திலான படைப்பு என்றும் கூறுகிறார்.
"பிறர் மனதைப் புண்படுத்தி விளம்பரம் தேட வேண்டும் என நான் நினைத்ததே இல்லை. என் திறமையின் மூலமாகவே எனக்கான பாராட்டுகள் வந்து சேர வேண்டும் என விரும்புகிறேன்.
"இப்படியெல்லாம் பேசிவிட்டீர்களே... கொஞ்சம் விரிவாகப் பேசி இருக்கக்கூடாதா' என்று பார்த்திபன் சார் மிகவும் வருத்தப்பட்டார்.
"வெளிப்படையாகவும் உண்மையாகவும் சொல்கிறேன். எனக்கு சாதி வெறி கிடையாது. சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்," என்கிறார் பிரிகிடா.

