'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் எந்தப் படம் முதலில் வெளிவரும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் சூரியை வைத்து அவர் இயக்கி வரும் 'விடுதலை' படம்தான் முதலில் வெளியாகும் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இது இரண்டு பாகங்களாக வெளிவரும் என்றும் சொல்கிறார்கள்.
ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 'விடுதலை'க்கான கதை, திரைக்கதையை அமைத்துள்ளார் வெற்றி மாறன். மார்க்சிய - லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொல்ல (என்கவுன்ட்டர்) முடிவு செய்து, இரு காவலர்கள் அழைத்துச்செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலே 'துணைவன்' சிறுகதையாகும்.
இதற்கு வெற்றிமாறன் எழுதியுள்ள திரைக்கதை மிகப் பரபரப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இந்தப் படத்தின் நாயகன் சூரி என்றாலும், அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. மேலும், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உட்படப் பலர் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். கலை இயக்குநர் ஜாக்கிக்கு இது ஒரு சவாலான படம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது விடுதலை படத்தின் நீளம் கருதி, இரண்டு பாகங்களாக திரையிட முடிவு செய்துள்ளாராம் வெற்றிமாறன். மேலும், படம் முழுமையாகத் தயாரானதும் உலகத் திரைப்பட விழாக்களில் முதலில் திரையிடப்படுமாம். அதன் பிறகுதான் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

