தாம் நடிக்கும் படத்தை, அதில் சொல்லப்பட்டிருக்கும் கதைக்காக ரசிகர்கள் பார்க்கவேண்டுமே தவிர, தனக்காகப் பார்க்கக்கூடாது என்பதே தனது கொள்கை என்கிறார் அருள்நிதி. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், தாம் நடிக்கும் கதைகளைத் தேர்வு செய்வதாக அவர் கூறுகிறார்.
அருள்நிதி நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் 'தேஜாவு'. இதுவும் ஒரு திகில் கதைதான்.
ஏன் திகில் படங்களில் மட்டுமே நடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, தாம் இதற்காக மெனக்கெடவில்லை என்றும் தேடி வரும் கதைகள் அவ்வாறு அமைவதாகவும் சொல்கிறார் அருள்நிதி.
"நான் திரையில் நடிக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்கம் முதலே கதைத் தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய படத்தில் நான் 30 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும் பரவாயில்லை. ஆனால், அந்தக் கதை ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்து வந்துள்ளது.
"அண்மையில் வெளியான 'டி பிளாக்', இப்போது வெளியாகி உள்ள 'தேஜாவு' ஆகிய இரு படங்களுமே திகில் வகையைச் சார்ந்தவைதான். அது மட்டுமல்ல. நான் தற்போது நடித்து வரும் 'டைரி' படமும்கூட திகில் வகைதான்.
"ஆனால், ஒவ்வொரு படத்துக்கும் இடையே நிச்சயம் ஒரு வேறுபாடு இருக்கும். மேலும், கதைக்களங்களும் வித்தியாசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். இந்த அம்சம்தான் எனது கதைத் தேர்வு கச்சிதமாக அமைய முக்கிய காரணமாக உள்ளது," என்று சொல்லும் அருள்நிதி, திரையில்தான் இறுக்கமான மனிதராகக் காட்சி அளிக்கிறார், அளவோடு பேசுகிறார்.
ஆனால் நிஜத்தில் மனிதர் வாயைத் திறந்தால் நகைச்சுவைதான். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருப்பதை உறுதி செய்கிறார்.
"நான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்காக முரட்டு மனிதனைப் போல் திரையில் காட்சி அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உண்மையில் நான் கலகலப்பாகப் பேசக்கூடியவன். 'டி பிளாக்' படத்தில் நடித்தபோது மேலும் இளமையாக உணர்ந்தேன். காரணம், அப்படிப்பட்ட இளமையான படக்குழு அமைந்தது.
"இந்தப் படத்தின் கதையை மொத்தமாக எழுதிக் கொடுத்திருந்தார் இயக்குநர். பாதி கதையைத் தாண்டுவதற்குள், அதன் முடிவை அறியும் ஆர்வம் ஏற்பட்டது. உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மீதமுள்ள காட்சிகளை விளக்கிச் சொல்லுமாறு கேட்டேன்.
"இதுபோன்ற படக்குழுக்கள் அமைவதும் புது இயக்குநர்களும்தான் எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, அவர்கள் கூறும் கதைகளில் நடித்தேன். ஓடும் குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள். இதை நான் எப்போதும் மறப்பதில்லை," என்கிறார் அருள்நிதி.
இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகில் அறிமுக இயக்குநர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் தந்திருப்பது இவர்தான்.
'மௌன குரு' படம் தொடங்கி, 'டிமான்டி காலனி' படங்கள் வரை புதுமுகங்கள்தான் இவரை இயக்கி உள்ளனர். அந்தப் படங்கள் அனைத்துமே விமர்சன, வசூல் ரீதியில் வரவேற்பு பெற்றவை.
"பெரிய, அனுபவ இயக்குநர்கள் என்னை அணுகியதில்லை. நானும் அவர்களை நாடிச் சென்றதில்லை. அவர்கள் யாரேனும் எனக்கு வாய்ப்பு அளித்தால் நடிக்கத் தயார்.
"அதே சமயம் என்னை வைத்து படம் இயக்கும்போது, அந்த இயக்குநர்களுக்கு 'பட்ஜெட்' பிரச்சினை ஏற்படக்கூடும். ஒருவேளை அதன் காரணமாக என்னை அணுகாமல் இருந்திருக்கக்கூடும்.
"எனினும், திரையுலகில் பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், எனது வட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். 'தேஜாவு', 'டைரி' ஆகிய படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.
"எது எப்படி இருந்தாலும், என்னை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் எந்த வகையிலும் நஷ்டம் அடையக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது அடுத்தகட்ட நகர்வுகள் இந்த அடிப்படையில்தான் இருக்கும்," என்று அக்கறையுடன் பேசுகிறார் அருள்நிதி.
அடுத்து, 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
அஜய் ஞானமுத்துதான் இதையும் இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரிடம் உதவியாளராக இருந்த வெங்கி வேணுகோபால்தான் இயக்கப் போகிறாராம்.
"அறிமுக இயக்குநர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் நான் இன்றுள்ள இடத்தை அடைய முக்கிய காரணம். அதற்காக அவர்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
"எனது அடுத்தடுத்த படங்களில் சில சோதனை முயற்சிகள் இருக்கும். எனினும், அதனால் யாருக்கும் இழப்போ பிரச்சினையோ ஏற்படாது," என்கிறார் அருள்நிதி.
, :

