சிறந்த துணை நடிகைக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார் லட்சுமி பிரியா சந்திரமௌலி. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.
பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் அளவுக்கு லட்சுமி பிரியாவுக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், வசந்த் இயக்கத்தில் உருவான படம் இவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையான லட்சுமி பிரியா, மனிதவளத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
'சாந்தி நிலையம்', 'தர்ம யுத்தம்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர் களில் நடித்துள்ள லட்சுமி பிரியா, 'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இதற்கிடையே, தேசிய விருது என்ற அங்கீகாரம் தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு ஊக்கமளிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் தன்னைப்போல் விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யாவுக்கு, நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்தார்.
"தேசிய விருது அழகான பிறந்தநாள் பரிசு. அன்புள்ள சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்," என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் மம்முட்டி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, தமக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை என 'சூரரைப் போற்று' படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.
விருதுப் பட்டியலில் தமது பெயர் இருப்பதைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

