கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது 'பேப்பர் ராக்கெட்' இணையத்தொடர். எதிர்வரும் 29ஆம் தேதியில் இருந்து முன்னணி ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாக உள்ளது.
சிறு வயதில் காகிதத்தில் ராக்கெட் செய்து பறக்கவிடாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். அந்தக் காகித ராக்கெட் கொடுக்கும் மகிழ்ச்சி விலை உயர்ந்த பொம்மைகளால் கிடைத்துவிடாது.
"இது முழுக்க முழுக்கப் பயணத்துடன் சம்பந்தப்பட்ட கதை. ஒவ்வொரு மனிதருக்கும் பயணம் என்பது மிக முக்கியமானது. நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் மிகவும் அழகானது. ஆனால், நம்மில் பலர் அந்த அழகை ரசிப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை அலசும் கதைதான் பேப்பர் ராக்கெட்," என்கிறார் கிருத்திகா.
முக்கிய காட்சிகளைத் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் படமாக்கி உள்ளனர். அனைத்துமே கண்களைக் கவரும் அழகிய ஓவியம் போன்று காட்சியளிக்கும் இடங்களாக இருக்கும் என்கிறார்.
"பொதுவாக இணையத்தொடர் என்றாலே திகில், கொலை, வன்முறை என்றுதான் வகைப்படுத்துகின்றனர். நான் அவற்றில் இருந்து மாறுபட்டு நிற்கிறேன். குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய தொடரை உருவாக்கி உள்ளேன். மேலும், பெண் கதாபாத்திரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். இக்கதையை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். இக்கதையை எழுதத் தொடங்கியபோதே சினிமாவுக்கு ஏற்ற அமைப்புடன் எழுத முடியவில்லை. அந்தச் சமயத்தில் இணையத் தொடர் குறித்தும் பெரிதாகப் பேசப்படவில்லை. முன்பு எழுதிய கதையை ஏன் இப்போது இணையத்தொடராக எடுக்கக்கூடாது என்ற யோசனை வந்தது. அது இப்போது சாத்தியமாகி உள்ளது," என்கிறார் கிருத்திகா.

