சில கதாபாத்திரங்களில் நடித்தபிறகு அவற்றில் இருந்து வெளியேறுவது கடினமாக இருப்பதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
அண்மையில், குடும்ப வன்முறை குறித்து விரிவாக அலசும் தெலுங்குப் படம் ஒன்றில் இவர் நடித்து முடித்துள்ளார். அப்போதுதான் இதுபோன்ற அனுபவம் கிடைத்ததாம்.
"குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடித்தபோது அதன் தாக்கத்தை வெகுவாக உணர்ந்தேன். அதில் நான் கதறி அழவேண்டும். இயக்குநர் சொன்னபடியே நடித்து முடித்ததும் படக்குழுவினர் கைதட்டிப் பாராட்டினர். இயக்குநர் 'கட்' என்று சொன்னபிறகும் வெகு நேரம் அழுதுகொண்டே இருந்தேன்.
"அதற்கு முன்பு நான் இவ்வாறு அழுதது கிடையாது. ஒருவேளை நான் நடிக்கும் விதம் இப்போது மாறி இருப்பதாக நினைத்துக்கொண்டேன்," என்கிறார் ஐஸ்வர்யா.
பிற நடிகைகள் தாங்கள் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்காக பயிற்சி மேற்கொள்வது, தகவல்களைச் சேகரிப்பது என்று ஆய்வுபூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்கள் எனில், இவர் அதற்கு நேர்மாறாக உள்ளார். தன்னுடன் நடிப்பவர்களிடம் அவர்களுடைய சொந்த அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
"பள்ளி நாள்களிலேயே நான் இப்படித்தான். வருப்பில் ஆசிரியர் சொல்வதை இயந்திர கதியில் எழுதி வைத்துப் படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, செயல் அளவில் அவற்றைச் சோதித்துப் பார்க்க விரும்புவேன்.
"இன்று திரையுலகிலும் அதைத்தான் செய்கிறேன். ஒரு நடிகையாக பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என்பது என் கருத்து.
"உதாரணத்துக்கு, ஒரு துக்க காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அதுகுறித்து எனது தோழிகள் சிலரிடம் பேசினேன். தங்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களை இழந்தபோது என்ன செய்தனர் என்பதைக் கேட்டறிந்தேன். அவர்கள் அனைவருமே தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தவும் சமாளிக்கவும் ஒரே வழிமுறையைக் கையாண்டுள்ள னர் எனத்தெரிந்தது.
"அதன் பிறகு துக்க காட்சியில் நடித்தபோது நான் மிகவும் இயல்பாக நடித்திருப்பதாக இயக்குநர் என்னைப் பாராட்டினார்," என்று சொல்லும் ஐஸ்வர்யா, தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகளிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
'அர்ச்சனா 31 நாட் அவுட்' என்ற மலையாளப் படத்தில் தனி நாயகியாக நடித்துள்ளார். அதையடுத்து 'குமரி' என்ற படமும் நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகி உள்ளது.
"முழுப் படத்தையும் எனது தோள்களில் தாங்க வேண்டும் என்று இயக்குநர்கள் கூறும்போது ஒருவகையில் பதற்றமாகவும் அதேசமயம் உற்சாகமாகவும் உணர்கிறேன். இது மிகுந்த அழுத்தம் தரக்கூடிய விஷயம்.
"கொரோனா நெருக்கடிகளைக் கடந்து இவ்விரு படங்களும் உருவாகி உள்ளன. இவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து எனது அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்," என்று சொல்லும் ஐஸ்வர்யா, தமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அமைவது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என்கிறார்.
அதேசமயம் தொடர் படப்பிடிப்புகள் காரணமாக தமது பெற்றோருடன் நேரம் செலவிட முடியாமல் தவிக்கிறாராம்.
"நான் சினிமாவில் நடிப்பதை பெற்றோர் விரும்பவில்லை. மருத்துவத்துறையில் நான் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம். எப்படியோ சமாதானப்படுத்தி நடிக்க வந்துள்ளேன்.
"இப்போது பெற்றோருடன் உட்கார்ந்து பேசுவதற்குக்கூட நேரமில்லை. அதனால் வருத்தப்படுகிறார்கள்," என்கிறார் ஐஸ்வர்யா.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்திருப்பவர், அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். இந்த வாய்ப்பு கிடைக்கும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார்.
"இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது அனைவருக்குமே உள்ள கனவு. எனக்கு அது நிறைவேறி உள்ளது. அவர் பணியாற்றுவதை அருகில் இருந்து பார்ப்பதே பெரிய விஷயம். அவரது இயக்கத்தில் நடிப்பது எல்லோருக்கும் அமையாத வாய்ப்பு.
"ஏதோ சிறிய படத்தை இயக்குவதுபோல் கொஞ்சம்கூட பதற்றமோ, கோபமோ இல்லாமல் இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
"நிச்சயமாக இது உலக அளவில் பேசப்படும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும்," என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
, :

