தாம் நாயகனாக நடித்துள்ள 'பொய்க்கால் குதிரை' படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் பிரபுதேவா.
இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற அவர், இயக்குநர் சொன்ன கதை பிடித்திருந்ததால் தயக்கம் இன்றி நடிக்க ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
'பொய்க்கால் குதிரை' படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியீடு காண்கிறது. 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் என இரு நாயகிகள் உள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்காக ஒற்றைக் காலில் நடனமாட வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட பிரபுதேவா, நடன அசைவுகளை நடன இயக்குநர் சதீஷ் சிறப்பாக அமைத்திருந்ததாகப் பாராட்டினார்.
"சதீஷின் உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். அதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் பாடல்களும் நடன அசைவுகளும் நிச்சயம் பிடிக்கும்.
"சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்ப்போம். இரண்டு அனுபவங்களும் முற்றிலும் மாறுபடும். அதேபோல், இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும்போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி.இமானின் பின்னணி இசைதான். அதற்காக அவருக்கு நன்றி.
"படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது எந்தச் சிரமமும் இல்லை. சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும் விரைவாகவும் நேர்த்தியாகவும் படமாக்கினார். 'பொய்க்கால் குதிரை' படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும்.
"ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, 'இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?' என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளரும் இயக்குநருமாகச் சேர்ந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும்," என பிரபு தேவா கூறுகிறார்.
பிரபுதேவா நடிப்பில் அண்மையில் வெளியான 'மை டியர் பூதம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து 'பொய்க்கால் குதிரை' படத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடுகிறார்கள்.
"இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கி இருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை.
"சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு தேவையான ஆளுமைத் திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும் திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார்.
"இதன் மூலம் அவர் தயாரிப் பாளர்களின் இயக்குநராக இருந் தார். என்னிடம் இருந்து நல்ல நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். 'பொய்க்கால் குதிரை' நல்லதொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது," என்கிறார் பிரபுதேவா.

