தாம் திரையுலகில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும் அதை நினைக்கும்போது ஏதோ கனவுலகத்தில் இருப்பது போன்று தோன்றுகிறது என்றும் கூறுகிறார் ஷ்ருதி ஹாசன்.
தமது திரைப் பயணம் இதுநாள் வரை நீடித்ததற்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு 'லக்' என்ற இந்திப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஷ்ருதி. தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா ஆகிய இருவருமே திரையுலகில் தடம் பதித்தவர்கள் என்ற போதிலும், பெற்றோரின் சிபாரிசு இல்லாமல் தனிப்பட்ட திறமையை மட்டுமே நம்பிச் செயல்பட்டு, திரையுலகில் தாக்குப்பிடித்து வருகிறார் ஷ்ருதி.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' தான் ஷ்ருதி தமிழில் அறிமுகமான படம். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடிக்கிறார்.
"என்னுடைய திரையுலக வாழ்க்கை ஒரு மாயாஜாலம் போன்றது. திரையுலகில் நுழைவேன், நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. எனக்கு விருப்பமான வேறு ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.
"பெற்றோர் இருவரும் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் என்ற போதிலும் எனக்கு அதன் மீது பெரிதாக எந்தவித ஈர்ப்பும் இல்லை. அதேசமயம், எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் காலப்போக்கில் கற்றுக்கொண்டேன்," என்று காணொ ளிப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஷ்ருதி.
எதிர்பாராத வகையில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் ஒரே படத்துடன் தனது நடிகை வேடம் கலையும் என்றுதான் எதிர்பார்த்தாராம். எனினும் சினிமா உலகம் தம்மை விடவில்லை என்கிறார்.
"கடந்த 13 ஆண்டு காலமும் நடந்தவை எல்லாம் ஏதோ கனவுபோல் தோன்றுகிறது. நடிகையாக வேண்டும் என்று நான் நினைக்காத ஒரு தருணத்தில் காலம் எனக்கு அந்தப் பணியைத்தான் கொடுத்தது. அதனால் அந்தத் துறையை நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.
"சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்காக உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.
"வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நம்பிக்கையுடன் எப்படிப் பணியாற்றுவது என்பதையும் கற்றுக்கொண்டுள்ளேன். அதேபோல், கதைகளைக் கேட்பதிலும் அவற்றைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விஷயங்களைப் பாராட்டுவது எப்படி என்பதையும் 13 ஆண்டுகால அனுபவம் கற்றுக்கொடுத்துள்ளது," என்கிறார் ஷ்ருதி.
ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி பாராட்டும் அதேவேளையில் திரையுலகில் தமக்கு ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
அண்மையில் ஷ்ருதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஹார்மோன் குறைபாடுகளால் அவர் உடல்நலம் குன்றியிருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதனால் தாம் மனம் நெகிழ்ந்து போனதாகவும் தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஷ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா' என்ற படத்திலும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவின் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. எனினும் அவை குறித்து தாம் கவலைப்படுவது இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார் ஷ்ருதி.
"ஒரு படத்தின், கதை, திரைக்கதை, எனக்கான பாத்திரத்தின் தன்மை குறித்து மட்டுமே கவனம் செலுத்துவேன். நடிப்பு என்று வந்தபிறகு நமக்குள்ள கடமையை நிறைவேற்றத் தவறக்கூடாது," என்கிறார் ஷ்ருதி ஹாசன்.

