"நிறைய கலைஞர்களுடன் கூட்டணி அமைத்து 'காஃபி வித் காதல்' படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர்.சி.
மூன்று சகோதரர்கள், அவர்களுடன் தொடர்புள்ள உறவுகள், அவர்களின் காதல், அவற்றின் வெற்றி, தோல்வி போன்ற பிரச்சினைகளை எல்லாம் ரசிகர்கள் புன்னகையோடு திரையில் பார்க்கலாம்," என்கிறார் சுந்தர்.சி.
முதலில் 'நலம் வாழ' என்றுதான் படத்துக்கு தலைப்பு வைத்தாராம். மிகவும் மென்மையாக இருப்பதாக சிலர் கூறவே 'காஃபி வித் காதல்' என்று தலைப்பை மாற்றி உள்ளார்.
"சிலர் சாதி, சமுதாயம் என்று கதைக்கருவை தேர்ந்தெடுப்பார்கள். நானும் எல்லாவிதமான கதைக்கருக்களையும் பார்த்துவிட்டேன். எனது படங்களில் நகைச்சுவை கொஞ்சம் அதிகமாக இருப்பதால் 'நகைச்சுவை பட இயக்குநர்' என்று முத்திரை குத்திவிட்டனர்.
"எனக்கு நடிகர்கள் ஜீவா, ஜெய்யுடன் எப்போதுமே ஒத்துப்போகும். என்னுடன் பணியாற்ற வேண்டும் என்றால் மிகவும் துடிப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு அண்ணனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். குடும்ப உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். அதேசமயம் கொஞ்சம் சபல புத்தி உள்ளவர். இதுவரை ஸ்ரீகாந்துடன் பணியாற்றியதில்லை. ஆனால் இந்தப் படத்தின் மூலம் உற்சாகமாக ஒரு குழுவாக இணைந்துவிட்டோம்.
"மாளவிகா சர்மா, அம்ரித்தா ஐயர், பிக்பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன் என்று நிறைய நாயகிகள். அனைவருமே முதல் இடத்திற்குப் போகத் தகுதியுள்ள பெண்கள்தான். மூன்று அண்ணன்களுக்குமான பாசமுள்ள தங்கையாக திவ்யதர்ஷினி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆதாரமே அவர்தான் எனலாம்.
"ஒவ்வொரு சகோதரருக்கும் கிளைக்கதை இருக்கும். அதேபோல் யோகிபாபு சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகளுக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது," என்கிறார் சுந்தர்.சி.
கடைக்கோடி ரசிகர்கள் வரை பார்த்து ரசிக்கும் வகையில் நல்ல படத்தை உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிடுபவர், இதுபோன்ற காதல் கதைகளை ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்கிறார்.
"ஒரு படத்தில் நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என எல்லாமே அளவோடு இருக்க வேண்டும். நான் எப்போதுமே கதை, திரைக்கதை, வசனங்கள் ஆகியவற்றுக்காக முன்கூட்டியே நன்கு உழைப்பேன். இதனால் படப்பிடிப்புக்குச் செல்லும்போது தேவையற்ற குழப்பம் இருக்காது.
"நான் இயக்கிய 'உள்ளத்தை அள்ளித் தா', 'தீயா வேலை செய்யணும் குமாரு' எல்லாம் இப்படிப்பட்ட படம்தான். ஆனால் நகைச்சுவை கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இந்தப்புதிய படத்தில் எல்லாம் சரி விகிதத்தில் அமைந்திருக்கும்," என்கிறார் சுந்தர்.சி.
இந்தப் படத்தில் ஊட்டி நகரத்தையும் ஒரு பாத்திரமாகவே காட்சிப்படுத்தி உள்ளாராம். சென்னையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கக்கூடிய சூழ்நிலை இல்லை என்றும் அதற்கான அனுமதியைப் பெறுவது மிகச் சிரமமான விஷயம் என்றும் சொல்கிறார்.
"கடந்த வாரம் சென்னையில் உள்ள என் சொந்த வீட்டில் படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த யாரோ புகார் கொடுத்துள்ளனர். உடனே காவல்துறை என் வீடு தேடி வந்துவிட்டது.
"இப்படி ஏதாவது பஞ்சாயத்து இருக்கும் என்பதால்தான் சென்னையே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். ஹைதராபாத், ஊட்டி என்று போய்விட்டால் பிரச்சினையே இருக்காது. அது மட்டுமல்ல, ஊட்டி மிக அழகான ஊர். எனக்கும் அதுதான் ஒத்துப்போகிறது.
'காஃபி வித் காதல்' படத்துக்கும் இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அவரும் சுந்தர்.சி.யும் இணைந்து பணியாற்றி 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இடைவெளி ஏற்பட்டதே தெரியவில்லை என்றும் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போன்று உணர்வதாகவும் சொல்கிறார்.
"முன்பு எப்படி இருந்தாரோ, அதேபோன்றுதான் இருக்கிறார். எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். இன்னும் பாடல் வரவில்லையே என்று நான் பதற்றமாகக் கேட்டால், 'நாளைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சாந்தமா பதில் வரும். எதற்கும் 'முடியாது' சொன்னது கிடையாது.
"எனக்கு கமல் படத்தில் இடம்பெற்றுள்ள 'ரம்பம்பம்' பாடல் ரொம்பப் பிடிக்கும். அதை ரீமிக்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது நினைப்பேன். அந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது.
"இந்தப் பாடலைப் படமாக்கும்போது யுவனும் படப்பிடிப்பு வந்தார். இந்தப் படத்தில் அவர் இருப்பது பளிச் என்று தெரியும்," என்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
, :

