ஒரு பெண்ணின் ஒவ்வொரு செயலும் தலைப்புச் செய்தியாக வந்து விடுகிறது என்றும் எந்தவொரு விஷயத்திலும் ஒரு பெண்ணின் விருப்பம் என்ன என்பதை அறிய சமூகம் ஆவலாக உள்ளது என்றும் கூறுகிறார் ஆலியா பட்.
நடிகர் ரன்பீர் கபூரும் இவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் அன்பர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அண்மையில் தாம் தாய்மை அடைந்துள்ள தகவலை வெளியிட்ட ஆலியா, தற்போது ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அவர் நடித்து வரும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், திரைத்துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வரும்போது, இவ்வளவு இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்று சிலர் கேட்கின்றனராம். அவர்களுக்காக பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் ஆலியா.
"நான் இளமையிலேயே தாயாகிறேன் என்பது சரிதான். ஆனால், இதனால் வேறு ஏதேனும் மாற போகிறதா?
"எனது தொழில் சார்ந்த வாழ்க்கையை, ஒரு குடும்பமோ அல்லது ஒரு குழந்தையோ ஏன் மாற்ற போகிறது? அவை முற்றிலும் இரண்டு வேறுபட்ட விஷயங்கள்.
"முட்டாள்தனம் வாய்ந்த விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்து வதற்குப் பதிலாக, ஓர் எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன்," என்பதே ஆலியாவின் விளக்கம்.
இதுபோன்ற எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கையில் தற்போது எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்பதைத்தான் அவர்களுடைய வாதங்கள் எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தாம் அத்தகைய கவலைகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்கிறார்.
"எனது வாழ்வில் நான் எடுத்த பல முடிவுகள் என்னால் தனித்தே எடுக்கப்பட்டுள்ளன. அதற்கும் என்னைச் சுற்றியுள்ள எவருக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பொதுவாக நான் பெரிய விசஷயங்களை திட்டமிடுவதே இல்லை. என்னைப் பொறுத்தவரை அவை எல்லாம் இயல்பாகவே நடக்கும்.
"என் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதனை பின்பற்றவே விரும்புகிறேன். எனது உள்ளுணர்வும் துணிச்சலும்தான் என்னை வழிநடத்துகின்றன. எனது தொழில் சார்ந்த, தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறேன். இதனால், பல விஷயங்கள் மிக அழகாகவும் எனது எதிர்பார்ப்புகளின்படியும் நடந்துள்ளன," என்கிறார் ஆலியா பட்.
பல்வேறு தளங்களில் தமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத பலர் தமக்கு ஆதரவு அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்.
"இதுகுறித்த விழிப்புணர்வு என்னுள் ஏற்பட்டுள்ளது. நாம் இப்போது 2022ஆம் ஆண்டில் இருக்கிறோம். அதனால் மக்கள் பல கேள்விகளைக் கேட்கின்றனர். என்னைப் பற்றிய சில கட்டுரைகள், செய்திகள் தொடர்பாக மக்கள் தங்கள் எதிர்ப்பையும் கோபத்தையும் பதிவு செய்துள்ளனர். 'ஆலியா மீது உங்களுக்கு என்ன கோபம்... அவரை அவராகவே இருக்க விடுங்கள்' என பதிவிட்டு உள்ளனர்.
"இது தானாகவே நடக்கிறது. சமூக மாற்றங்களும் இவ்வாறு இயல்பாகவே நடந்தேறுவதாக நான் உணர்கிறேன்," என்கிறார் ஆலியா.
ஆகக் கடைசியாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண் ஒருவர் எதிர்கொள்ளும் வாழ்வியல் சார்ந்த சவால்களை விளக்கும் 'கங்குபாய் கத்தியாவடி' என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இவர், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
தற்போது 'பிரம்மஸ்திரா 1 சிவா' என்ற படத்தில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் 'டார்லிங்ஸ்' என்ற படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதில் ஆலியாவுடன், ஷெபாலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
, :

