பல்வேறு கடுமையான விமர்சனங்கள், சிரமங்களைக் கடந்து வந்த பிறகே தனுஷ் இன்றுள்ள நிலையை எட்டிப்பிடித்துள்ளதாக அவரது தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான பிறகே நடிகர் விஜய்கூட இன்று முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் திரையுலகப் பயணம் குறித்து கஸ்தூரி ராஜா பேசும் காட்சி அடங்கிய காணொளிப் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதை தனுஷ் ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
"வாழ்க்கையின் தொடக்கத்தில் வரும் சோதனைகளை, வலிகளைகண்டு பயந்து ஓடாமல் நின்று போராடினால் வெற்றி என்பது தன்வசப்படும் என்பதற்கு தனுஷ், விஜய் நல்ல எடுத்துக்காட்டு.
"தனுஷ் என்னைவிட மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அவருடன் ஒப்பிடும்போது, நான் சினிமாவில் பெரிதாக கஷ்டப்படவில்லை என்பேன். 'துள்ளுவதோ இளமை' படத்தை பிரபல விநியோகஸ்தர் ஒருவருக்கு திரையிட்டுக் காட்டினேன். படம் முடிந்த பிறகு எல்லோரும் இருந்தனர் அவரை மட்டும் காணவில்லை.
"பின்னர் தொலைபேசி வழி தொடர்புகொண்டு கேட்டதற்கு. 'நம்ப பையன் நடித்த படம் என்பதால் நம் கண்களுக்கு அழகாத்தான் தெரிவான். ஆனால் காசு கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் இல்லையா... எனக்கு அப்படித் தெரியவில்லை' என கூறி அசிங்கப்படுத்தினார். ஆனால் தனுஷ் இன்று சாதித்துக் காட்டி உள்ளார்," என்று கஸ்தூரி ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

