தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையத்தொடர்கள், சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் செயல்பாட்டாளர் எனப் பன்முகங்களைக் கொண்டுள்ளார் அம்மு அபிராமி.
'அசுரன்' படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதைப் பெற்றுச் சாதித்தவர்.
தற்போது பேட்டரி படத்தில் நடித்துள்ளார்.
"இது மருத்துத்துறையில் உள்ள சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் படைப்பு. முழுநீள மருத்துவ திகில் கதை எனலாம். தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும்.
"இயக்குநர் மணிபாரதி வெறும் நாயகியாக பாடல் காட்சிகளில் மட்டும் என்னைப் பயன்படுத்தாமல், கனமான கதாபாத்திரத்தை அளித்துள்ளார். அதேசமயம் நல்ல பாடல்களும் உள்ளன.
படத்தின் இறுதிப்பகுதி வரை எனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், என் நடிப்புத் திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்த முடிந்தது. இந்தக் காலகட்டத்துக்கு மிகத் தேவையான ஒரு படமாக இருக்கும்," என்கிறார் அம்மு அபிராமி.
ஒரு பார்வையாளராக இருந்துதான் கதை கேட்பாராம். இதுவரை தமக்கு அமைந்த எல்லா கதைகளும் கதாபாத்திரங்களுமே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்.
எனினும் பல படங்களில் இவரது கதாபாத்திரம் இறந்துவிடுவதாக அமைவது ஏன் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனராம்.
"ஒருவகையில் ரசிகர்கள் இவ்வாறு கேட்பது சரிதான். பல படங்களில் நான் இறந்துவிடுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே 'நான் இந்தப் படத்திலே சாக மாட்டேன் அல்லவா' என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்," என்று சொல்லும் அபிராமி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியில்தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாராம்.
அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதுதான், நடிகையாக வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளார். எனினும் ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்றால் மற்றொன்றை இழக்க வேண்டும் என்பதற்கேற்ப, சினிமா வாய்ப்புக்காக தொலைக்காட்சியில் தோன்றுவதற்கான முயற்சிகளைக் கைவிட்டுள்ளார்.
"அது மட்டுமல்ல, நண்பர்களுடன் விளையாடும் நேரம் குறைந்துபோனது. என் வயதுக்குப் பொருத்தமில்லாத வகையில் பள்ளி மாணவி, பதின்ம வயதுப் பெண்ணாக நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிக எண்ணிக்கையில் தேடி வருகின்றன. எனக்கு இருபத்து இரண்டு வயதாகிவிட்டது. இதைச் சொன்னால் யாரும் நம்புவதாக இல்லை.
"அதே சமயம் என்னுடன் நடிக்கும் பலர் என்னை இன்னும் சின்னப் பெண்ணாகவே நினைத்து பாசம் காட்டுவார்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து உதவுகிறார்கள்," என்கிறார் அம்மு அபிராமி.
தமிழ் தெரிந்த நடிகைகளில் அம்முவும் ஒருவர். மொழி தெரிந்து நடிப்பதால் கதாபாத்திரத்துடன் தம்மால் எளிதில் பொருந்திப்போக முடிகிறது என்கிறார்.
"இத்தனை படங்களில், சிறப்பான கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைகிறது என்றால் அதற்கு நான் தமிழ் தெரிந்த பெண் என்பதுதான் காரணம்.
மேலும் விருது பெறும் அளவுக்கு நான் முன்னேறி வந்திருப்பதற்கும் தமிழ்தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
"அதுமட்டுமல்ல, இயல்பாகவே தமிழ்ப் பெண் என்கிற கர்வம் எனக்கு எப்போதும் உண்டு," என்று சொல்லும் அம்மு அபிராமி, 'பேட்டரி' பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.
மேலும் 'கோலி சோடா 2.0' இணையத் தொடரில் நடித்து வருபவர், இரண்டு நகைச்சுவைப் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.
"தமிழ்ப் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் எனக்கான வாய்ப்புகள் பல தேடி வருகின்றன. அவற்றிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்," என்கிறார் அம்மு அபிராமி.
, :

