ஒரு காலத்தில் வில்லனாகவும் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சரண்ராஜ். இவரது மகன் தேவ் சரண்ராஜ்நாயகனாக அறிமுகமாகும் படம் 'குப்பன்'.
விமானியாக வேண்டும் என விரும்பியுள்ளார் தேவ். அதற்கான படிப்பை முடித்து, வானில் பறக்கவும் தயாராக இருந்தாராம். ஆனால் கொரோனா நெருக்கடியால் ஏராளமான இளையர்களின் கனவு சிதைந்தது போலவே இவரும் தன் கனவைக் கைவிட நேர்ந்தது.
"திடீரென ஒருநாள் என் மகன் எழுப்பிய கேள்வியை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவோ பேரிடம் பேசுகிறீர்கள், பழகுகிறீர்கள். நிறைய சினிமா அனுபவமும் உள்ளது.
"அப்படி இருந்தும் எனக்காக ஒரு கதையை உருவாக்க வேண்டும் என உங்களுக்குத் தோன்றவே இல்லையா என்று தேவ் கேட்டதும், அன்றைய இரவே விடிய விடிய யோசித்து ஒரு கதையை தயார் செய்துவிட்டேன். அதுதான் `குப்பன்.' இவன் விரைவில் உங்களைச் சந்திக்கப் போகிறான்," என்கிறார் சரண்ராஜ்.
பல்வேறு மொழிகளில் 600 படங்களில் நடித்து முடித்தவர், இப்போது மகனுக்காக மீண்டும் களமிறங்கி உள்ளார்.
ஒரு மீனவப் பையனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் இடையிலான கதை இது. படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களால் காதல் என்பது எவ்வளவு அழகானது என்பதை உணர முடியும்," என்கிறார் சரண்ராஜ்.
"மீனவர்கள் மிகவும் நட்புணர்வோடு வாழ்பவர்கள். அவங்களுக்குள் இருக்கும் கதையே ஒரு நூறு தேறும். நான் அதில் ஆழமாகப் போகாமல், அழகான காதலை மட்டும் பிரித்து கதையை உருவாக்கி உள்ளேன்.
"தன்னை அண்ணாந்து பார்க்கிற அடித்தட்டு மக்களை தமிழ் சினிமா குனிந்து பார்ப்பதே இல்லை. அப்படிப் பார்க்கிற முயற்சிதான் இது. என் மகனை நாயகனாக நடிக்க வைத்துள்ளேன். விமானியாகும் முயற்சி தாமதமானதால் சினிமாவுக்கு வந்துவிட்டார். என் மகன் என்பதற்காகப் பாராட்டவில்லை. உண்மையாகவே நான் எதிர்பார்த்ததைவிட பிரமாதமாக நடித்துள்ளார்.
"சுஷ்மிதா, பிரியதர்ஷினி என இரண்டு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். ஆதி என்ற இன்னொரு நாயகனையும் கார்த்தி என்கிற வில்லனையும் அறிமுகப்படுத்துகிறேன். இவர்கள் எல்லார் மீதும் நல்ல வெளிச்சம் விழ வாய்ப்புள்ளது. நிச்சயம் ஒரு நல்ல கடற்கரைக் காதலை திரையில் பார்த்த மனநிறைவை இந்தப் படம் ரசிகர்களுக்கு அளிக்கும்," என்கிறார் சரண்ராஜ்.
படத்தில் இளையர்களைக் கவரும் அம்சங்கள் இருக்கும் என்றாலும் யதார்த்தத்தை மீறிய காட்சி அமைப்பு ஏதும் இருக்காது என்று உறுதியாகச் சொல்பவர், இன்றுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஒரு படத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்.
"சினிமா மாறிவிட்டது. நாயகர்களே வில்லன்களாக மாறும் காலம் இது. கமலே விஜய் சேதுபதி, பகத், சூர்யா என்று இளையர்களுக்கு இடம் கொடுத்து நடிக்கிறார். இவை எல்லாம் நல்ல மாற்றங்கள்," என்கிறார் சரண்ராஜ்.

