சினிமாவில் பொறுமை என்பது மிகவும் முக்கியம் என்பர். அதற்கு அதர்வா மிகச்சிறந்த உதாரணம் எனலாம்.
'செம போதை ஆகாதே', 'பூமராங்', 'தள்ளிப் போகாதே', 'குருதி ஆட்டம்' என்று இவர் நடித்த படங்களில் பல வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு ஒத்தி வைக்கப்பட்டவை. சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றபோதிலும் வசூலில் தயாரிப்பாளருக்கு ஏமாற்றத்தைத் தந்ததில்லை.
இந்நிலையில் அண்மைய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார் அதர்வா. மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்ததில்லை என்றாலும், நம்பிக்கையை மட்டும் தாம் இழக்கவில்லை என்கிறார் அதர்வா.
"ஒரு படம் வெளியாகவில்லை எனில் அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கும். ஒரு நடிகனாக எனது பங்களிப்பை தந்த பிறகு நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம் ஒரு படத்தின் தரம் குறித்து கவலைப்பட வேண்டியது என் பொறுப்பு. நல்ல படைப்பாக உருவாகி உள்ள பட்சத்தில் பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
"உதாரணமாக, 'பரதேசி' படத்தில் நடித்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் படம்தான் எனக்கான முகவரியாக உள்ளது. 'குருதி ஆட்டம்' படம் தாமதமாக வெளியீடு கண்டதற்கு கொரோனா நெருக்கடி உட்பட மேலும் சில காரணங்கள் உள்ளன. எனினும் நல்ல படம் என்று பலரும் பாராட்டும்போது மனதில் நம்பிக்கை அதிகரிக்கிறது," என்கிறார் அதர்வா.
எனினும் பட வெளியீடு தாமதமாகும்போதும் ஒரு படம் வசூலில் சாதிக்காத போதும் அதுகுறித்து தாம் வருத்தம் அடைவதாகக் குறிப்பிடுபவர், தோல்விப் படங்களைத் தேர்வு செய்தமைக்காக தாம் வருந்தியதில்லை என்கிறார்.
"வசூலில் ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்டேன். சில சமயங்களில் நான் எடுத்துள்ள முடிவு தவறோ என்று யோசித்திருக்கிறேன். வேறு மாதிரியான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தோன்றும். அதற்கு சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை நல்ல உதாரணமாகக் குறிப்பிட இயலும்.
"படத் தயாரிப்பு என்பது தந்திரங்கள் நிறைந்த பாதை. இதில் வெகு விரைவில் சிறப்பாக நடைபோட இயலும் என்ற நம்பிக்கை உள்ளது.
"எனினும் தவறு நடந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
"கொரோனா நெருக்கடி காரணமாக பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. திரையுலகில் பல வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என அனைவரது அணுகுமுறையும் மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒருவரே அனைத்தையும் செய்ய முயல்வார். மற்றவர்களுக்கு இடம்கொடுக்க பெரும்பாலானவர்கள் விரும்பியதில்லை. ஆனால் இப்போது கூட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
"வெவ்வேறு மூலைகளில் இருப்பவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நாம் முன்வைக்கும் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்கிறார்கள். மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது.
"என்னைப் பொறுத்தவரை தமிழ்ச் சினிமாவின் ஆகச்சிறந்த காலக்கட்டத்தில் இருப்பதாக உணர்கிறேன். நல்ல கதையம்சமுள்ள படைப்புகள் வெளிவருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசையும் ஆர்வமும் தலைதூக்கி உள்ளன.
"எனது படங்களைப் பார்ப்பவர்கள் தனித்துவமான அனுபவத்தைப் பெறவேண்டும் என விரும்புகிறேன். அதை நோக்கியே எனது திரைப்பயணம் திட்டமிடப்படுகிறது," என்று சொல்லும் அதர்வா, தற்போது 'டிரிக்கர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிக்கும் நிறந்த மூன்று படமும் வேகமாக வளர்ந்து வருகிறது.
அதர்வா நடிக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், தன் தந்தையும் நடிகருமான முரளி கூறிய அறிவுரையை தாம் மறக்கவில்லை என்கிறார்.
"எந்தவொரு தருணத்திலும் தமது நடிப்பை நான் பின்பற்றக்கூடாது என்றார் அப்பா.
"என் மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை மட்டுமே எனது நடிப்பில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அதுதான் எனது தனித்துவத்தை நிலைநிறுத்தும் என்றும் அப்பா சொன்னார். அவர் எதற்காக இந்த அறிவுரையைக் கூறினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது விலைமதிப்பற்ற பெரிய சொத்து எனக் கருதுகிறேன்.
"என்னை நடிகர் முரளியின் மகன் என்று குறிப்பிடுவதை நேசிக்கிறேன். ஆனால், அப்பாவுக்கு இதில் விருப்பம் இல்லை. அதர்வாவின் தந்தை முரளி என்று எல்லாரும் குறிப்பிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
"அதைச் சாதிக்க நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு இடையே எனக்கென கிடைத்துள்ள ஓர் இடத்தையும் ரசிகர்களின் ஆதரவு, அங்கீகாரத்தையும் ரசித்து அனுபவித்து வருகிறேன்.
"என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையும் என் மனதில் வலுவாக பதிந்துள்ளது." என்கிறார் அதர்வா.
, :

