அண்மைக் காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்து வருகிறார் காளி வெங்கட்.
'கார்கி' படத்தில் கதாநாயகி சாய்பல்லவியின் வழக்கறிஞர் இந்திரன் கலியபெருமாளாக மிரட்டல் நடிப்பை வழங்கிய காளி, அடுத்து வசந்தபாலன் இயக்கும் 'அநீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராகத்தான் தமது திரைப்பயணத்தைத் தொடங்கினார் காளி வெங்கட். இவரது குரல் வித்தியாசமாக உள்ளது என பலரும் கூறுகின்றனர்.
"அண்மையில் 'கார்கி' படப்பிடிப்பில் நேரடியாகவே வசனங்களை ஒலிப்பதிவு செய்தனர். அப்போது ஒலிப்பதிவாளர் ராகவ் என்னை திடீரென அழைத்து, ஒரு மைக்கை சுட்டிக்காட்டினார். 'மிகவும் நுணுக்கமான சன்னமான சத்தங்களைக்கூட இந்த ஒலிபெருக்கி பதிவு செய்யும். ஆனால், காகத்தின் குரலை மட்டும் தவிர்க்க முடியாது. காக்கை தூரத்தில் கரைந்தாலும்கூட அது பதிவாகிவிடும். உங்கள் குரலும் அப்படித்தான், தவிர்க்கவே முடியாது' என்றார். இதை ஒரு பாராட்டாகவே கருதுகிறேன்.
"இப்போதும்கூட பின்னணிக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக நீடிக்கிறேன். என்னுடைய ஏற்ற இறக்கமான குரல் நடிகர் சிம்புக்கும் மிகவும் பிடிக்கும். 'ஈஸ்வரன்' படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். படப்பிடிப்பின்போது, 'இவர் வாயாலேயே நடிக்கிறார் பாருங்க' என்று உரிமையோடு கலாட்டா செய்து, பாராட்டவும் தவறமாட்டார்," என்கிறார் காளிவெங்கட்.
'கார்கி' படத்துக்காக அதிகம் மெனக்கெட்டதாகக் குறிப்பிடுபவர், அதில் சாய் பல்லவியின் நடிப்பு அபாரமாக இருந்தது எனப் பாராட்டுகிறார்.
"இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் எனது நடிப்பு மேலும் மெருகேறி இருப்பதாக உணர்கிறேன். நடிகர் கலையரசன் திடீரென ஒருநாள் தொடர்புகொண்டு இந்தப் படம் குறித்து விவரம் சொன்னார். இயக்குநர் கௌதம் சந்தித்துக் கதை சொல்வார், பிடித்திருந்தால் ஒப்புக் கொள்ளுங்கள் என்றார்.
"நானும் கௌதமும் நேரில் சந்தித்துப் பேசினோம். முதல் பாதி கதையைக் கேட்டதும் பதறிப்போனேன். முழுக் கதையையும் கேட்டு முடித்தபோது உடல் நடுங்கியது. அடுத்த மூன்று நாள்கள் இந்தக் கதைதான் மனதுக்குள் சுழன்றடித்தது. வேறு எதையும் யோசிக்கவே முடியவில்லை. எனது கதாபாத்திரத்தை அழகாகச் செதுக்கி இருந்தார் கௌதம்.
"படப்பிடிப்பின்போது யாரும் எந்தவித வசதியையும் எதிர்பார்க்கவில்லை. வியர்வையில் குளித்ததுபோல் இருந்ததாக சிறுகதை, நாவல்களில் குறிப்பிடுவதைப் போல், ஒட்டுமொத்த படக்குழுவும் வெப்பமான சூழலில் பணியாற்றினோம்.
"நீதிமன்றக் காட்சிகளுக்காக பெரிய அரங்கத்தை அமைத்திருந்தனர். நீதிமன்றத்தைச் சுற்றிலும் கதவு, சன்னல்கள் வைத்து அடைத்துவிட்டதால் காற்று வர வாய்ப்பின்றிப் போனது. மேலும், குளிர்சாதன வசதிக்கும் வழியில்லை. அதிலிருந்து வரக்கூடிய சத்தம், வசனங்களை நேரடியாக ஒலிப்பதிவு செய்யும்போது இடையூறாக இருக்கும் என்று கூறி, அதைத் தவிர்த்துவிட்டார் இயக்குநர்.
"திரையில் வியர்க்க விறுவிறுக்க நான் வசனம் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். அது உண்மையான வியர்வை. தண்ணீரை 'ஸ்பிரே' செய்து நடிக்கவில்லை. ஒருமுறை வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இரவு முழுவதும் தூங்காமல் நடித்து முடித்த கையோடு 'கார்கி' படப்பிடிப்பில் பங்கேற்றேன். அடுத்த மூன்று நாள்கள் நீதிமன்றக் காட்சிகளில் ஓய்வின்றி நடித்தேன். இப்படி சிரமப்பட்டு நடித்தது வீண்போகவில்லை. ரசிகர்களும் விமர்சகர்களும் என் நடிப்பைப் பாராட்டும்போது மனநிறைவாக உள்ளது," என்கிறார் காளி வெங்கட்.

