திருமணத்துக்கு அவசரப்படவில்லை என்கிறார் நடிகை அம்மு அபிராமி. 'அசுரன்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'ராட்சசன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு, கைவசம் ஆறு புதுப்படங்கள் உள்ளனவாம். இந்நிலையில் அண்மையில் இணையம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார் அம்மு அபிராமி. அப்போது சொல்லி வைத்ததுபோல், பல ரசிகர் கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பக்குவமாகப் பதிலளித்தார் அம்மு. "எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணத்துக்கு அவசரப்படவில்லை. திரையுலகில் சாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றையாவது சாதிக்க விரும்புகிறேன். மேலும், என் மனதில் நிறைய கனவுகள் உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும். அதன்பிறகுதான் திருமணம்," என்கிறார் அம்மு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீ திவ்யா. விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் புதுப் படத்துக்கு 'ரெய்டு' எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதைப்படி இரண்டு நாயகிகள் உள்ளனர். அவந்திகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இந்நிலையில் முதன்மை நாயகியாக ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனராம். விக்ரம் பிரபுவும் ஸ்ரீ திவ்யாவும் ஏற்கெனவே 'வெள்ளைக்கார துரை' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் வாய்ப்புகள் தேடிவர வேண்டும் என்பதற்காகத் தன் சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா.
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை உடனுக்கு டன் இணையத்தில் வெளி யிட்டு வரும் இணையத் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சர்ச்சையில் சிக்கிய இணையத்தளங்களில் 'தமிழ் ராக்கர்ஸ்' தளமும் ஒன்று.
இந்நிலையில், 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பில் இணையத்தொடர் ஒன்று உருவாகி உள்ளது. அருண் விஜய் இதில் நாயகனாக நடித்துள்ளார். மேலும், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் தொடர். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் குறு முன்னோட்டத் தொகுப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில், வரும் 19ஆம் தேதி முதல் இத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அண்மைய காணொளிப்பதிவில், 'இப்போதெல்லாம் என்ன படம் எடுக்கிறார்கள். என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் எனப் புரியவே இல்லை' என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டுவிட்டர் தளத்தில் கால்பதித்துள்ளார் நடிகர் விக்ரம். ரசிகர்களின் அன்பை அனுபவிக்கவே தாம் டுவிட்டரில் இணந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்களைப் பெரும்பாலானோர்க்கு விரைவாகவும் எளிதாகவும் சொல்ல முடியும். டுவிட்டரில் சற்றே தாமதமாக இணைந்துள்ளேன். அதாவது பத்து, பதினைந்து ஆண்டுகாலம் தாமதித்துவிட்டதாக நினைக்கிறேன். எனினும் இதுதான் நான் சமூக ஊடகங்களில் இணைய சரியான நேரம் என்று தோன்றுகிறது. நமக்கான அன்பு காத்திருக்கிறது. இதை பலர் என்னிடம் கூறியுள்ளனர். அந்த அன்பை அனுபவிக்கும் நோக்கத்துடன்தான் டுவிட்டர் தளத்தில் இணைகிறேன். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு என் அன்பை பகிர்கிறேன்," என்று விக்ரம் கூறியுள்ளார்.