தெலுங்குத் திரையுலகில் கடந்த பதினைந்து நாள்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்குத் தயாரிப்பாளர்கள் பலரும் படத் தயாரிப்பால் பெரும் நஷ்டங்களைச் சந்தித்துள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியே வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழ்ப் படங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. காரணம், அதிக பொருள்செலவில் தயாராகும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத், தெலுங்கானா பகுதிகளில்தான் நடைபெறுகின்றன. அந்த வகையில், விஜய்யின் 'வாரிசு', தனுஷின் 'வாத்தி', சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்', ஷங்கரின் 'ஆர்.சி-15' ஆகிய பட வேலைகள் ஹைதராபாத்தில்தான் நடந்து வந்தன. வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதை அடுத்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன.
"கதாநாயகர்கள் பல கோடி ரூபாய் சம்பளம் பெறுவதைத் தடுக்க முடியவில்லை. பட வேலைகள் தொடங்கிய உடனேயே அவர்கள் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் தயாரிப்பாளரின் சுமை அதிகமாகிறது. எனவே இனி படம் தொடங்கியதும் குறிப்பிட்ட தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு நடிக்க வேண்டும். படம் முடிவடைந்து வெளியீடு காணும்போது மீதி தொகையைப் பெறவேண்டும்.
"மேலும் படத்தின் தயாரிப்புச் செலவுகளைக் குறைப்பது குறித்தும் தயாரிப்பாளர்கள் சில கோரிக்கை முன்வைத்துள்ளனர். அவையும் கதாநாயகர்களால் ஏற்கப்பட்டுள்ளன," என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.
அநேகமாக தெலுங்கு முன்னணி நடிகர்கள் தங்கள் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையைக் குறைத்துக் கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் தாக்கம் கோலிவுட்டில் எதிரொலிக்கும் பட்சத்தில் தமிழ்த் திரையுலகிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்த் தயாரிப் பாளர்களும் இதுகுறித்து ஆலோ சனை நடத்தி வருகின்றனராம்.

